பெய்ஜிங்: விண்வெளிக்கு அனுப்பப்பட்ட சீன ராக்கெட்டின் உடைந்த பாகங்கள் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் அது எங்கு வேண்டுமானாலும் விழக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஜூலை 24ஆம் தேதியன்று லாங் மார்ச் 5பி ராக்கெட்டை அனுப்பியது சீனா.
அது கட்டுப்பாட்டை இழந்து, மீண்டும் பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் வரும் ஜூலை 31ஆம் தேதி வாக்கில் அது பூமிக்குள் நுழையும் என்றும் கலிஃபோர்னியாவில் உள்ள ஏரோஸ்பேஸ் நிறுவனம் சொன்னது.
அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பிரேசில், இந்தியா, தென்கிழக்காசிய நாடுகளின் பகுதிகளில் ஏவுகணையின் பாகங்கள் விழக்கூடும் என்று கூறப்படுகிறது.
மக்கள் நெரிசல் அதிகமாக உள்ள பகுதிகளில் ராக்கெட் பாகங்கள் விழுமோ என்ற கவலைக்கு மத்தியில், பூமியை நோக்கி வரும் ராக்கெட் பாகங்களின் நிலை குறித்து சீனா தொடர்ந்து கண்காணித்து வரு வதாகவும் உடனுக்குடன் அதுகுறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்வதாகவும் சீன வெளியுறவு அமைச்சு நேற்று சொன்னது.
பெரும்பாலான பாகங்கள் பூமிக்குள் நுழையும்போதே எரிந்துவிடும் என்பதால், பூமிக்கு ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஜாவ் லிஜியன் சொன்னார்.

