தோக்கியோ: இந்தோனீசியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ராணுவப் பயிற்சியில் முதல்முறையாக ஜப்பானிய தற்காப்புப் படைகளும் பங்கேற்கவுள்ளதாக ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா சொன்னார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் இப்பயிற்சியில் பங்கேற்கின்றன.
இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் முயற்சிகளை எடுத்துவரும் நிலையில், ஜப்பானும் தமது ஈடுபாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
தமது சீனப் பயணத்திற்குப் பிறகு இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, நேற்று ஜப்பான் சென்று பிரதமர் கிஷிடாவைச் சந்தித்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கிஷிடா, "இந்தோனீசியா, ஜப்பானின் முக்கிய கூட்டாளியாகும். ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இந்தோனீசியாவில் நடைபெறவுள்ள கருடா கூட்டு ராணுவப் பயிற்சியில் ஜப்பானியத் தற்காப்புப் படைகளும் கலந்துகொள்ளவுள்ளன," என்றார்.
இந்தோனீசிய அரசாங்கத்திற்கு ஜப்பான் 43.6 பில்லியன் யென் ($442 மில்லியன் வெள்ளி) கடனாக வழங்குகிறது என்றும் கிஷிடா கூறினார். உள்கட்டமைப்பு திட்டங்கள், பேரழிவு தடுப்பு ஆகியவற்றுக்காக அது பயன்படுத்தப்படும்.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் கையெழுத்தாக உள்ள இந்தோனீசிய-ஜப்பான் பொருளியல் பங்காளித்துவ ஒப்பந்தத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவர இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக இந்தோனீசிய அதிபர் விடோடோ குறிப்பிட்டார்.
வாழைப்பழம், அன்னாசிப்பழம், மாம்பழத்தில் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருள் போன்ற சிலவற்றின் மீதான வரிகளை ஜப்பான் குறைக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டதாக விடோடோ சொன்னார்.
ஜப்பானின் டொயோட்டா, மிட்சுபிஷி ஆகிய கார் நிறுவனங்கள் இந்தோனீசியாவில் முதலீடு செய்யவுள்ளதாக அந்நாட்டின் பொருளியல் அமைச்சு சொன்னது.

