மலேசிய நாடாளுமன்றத்தில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது
கோலாலம்பூர்: மலேசிய நாடாளுமன்றத்தில், கட்சித்தாவல் தடுப்பு மசோதா எந்த எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேறியது.
இரண்டு நாள் விவாதத்துக்குப் பின்னர் அது நேற்று நிறைவேற்றப்பட்டது. ஆயினும் பெர்சத்து கட்சியைச் சேர்ந்த யாரும் அவ்விவாதத்தில் பங்கேற்கவில்லை.
மசோதா நிறைவேற, மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், 209 பேர் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். 11 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
சட்ட திருத்தங்களை இரு கட்சிக் குழு பார்வையிட்ட பிறகு, பிரதமர் இஸ்மாயில் புதன்கிழமைஅன்று இதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
உறுப்பினர்கள், தங்களது கட்சி யின் கொள்கைகளைக் கடைப் பிடிக்க வேண்டும் என்ற செய்தியை இந்த மசோதா தெளிவுபடுத்துவதாக பிரதமர் சொன்னார்.
மலேசியாவில் சென்ற இரண்டு ஆண்டுகளில் மூன்று அரசாங்கங்கள் மாறிவிட்டன. உறுப்பினர்கள் கட்சி மாறியதே அதற்கு முக்கிய காரணமாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவதே, அரசியல் நெருக்கடியையும் நிலையற்றதன்மையையும் ஏற்படுத்துகிறது.
எனவே, அவர்கள் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு மாறுவதை இச்சட்டம் தடுக்கும். அரசியல் கட்சிகளிடையே நிலவும் குதிரை பேர நடைமுறையை இச்சட்டம் முடிவுக்குக் கொண்டு வரும்.
பிரதமர் இஸ்மாயிலுக்கும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்கும் இடையிலான உடன்பாட்டின் முக் கியமான நிபந்தனைகளில், கட்சித்தாவல் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதும் அடங்கும்.
கட்சித்தாவல் தடுப்புச் சட்டத்தின்கீழ், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கட்சி மாறும்போது மீண்டும் தேர்தல் நடத்தப்படலாம்.
மேலும் பதவி விலகும் உறுப்பினர்கள் ஐந்து ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற தடை இனி கிடையாது. இது, கட்சியில் இருந்து விலகியவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கு வழிவகுக்கும்.

