ஆசிய பசிபிக் வட்டாரம் குறித்து அனைத்துலக பண நிதியம் முன்னுரைத்தது
நியூயார்க்: ஆசிய பசிபிக் வட்டாரத்தின் பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பை 4.2 விழுக்காடாக அனைத்துலகப் பண நிதியம் குறைத்துள்ளது. சென்ற ஏப்ரலில் முன்னுரைக்கப்பட்டதைவிட இது 0.7 விழுக்காடு குறைவாகும். 2021ல் ஆசிய பசிபிக் வட்டாரத்தின் பொருளியல் வளர்ச்சி 6.5 விழுக்காடாக இருந்தது.
2023ஆம் ஆண்டிற்கான வளர்ச்சியும் 4.6 விழுக்காடாக குறைத்து முன்னுரைக்கப்பட்டுள்ளது. இது, முன்பு எதிர்பார்க்கப்பட்டதைவிட 0.5 விழுக்காடு குறைவாகும்.
உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு, சீனாவின் பொருளியல் மந்தநிலை, உலகளாவிய வட்டி விகித அதிகரிப்பு உள்ளிட்டவற்றின் காரணமாக பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பு குறைக்கப்பட்டுள்ளது.
"அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித அதிகரிப்பால் நிலவும் இறுக்கமான நிதி நிலைமை, உக்ரேன்-ரஷ்யா போரின் காரணமாக ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு ஆகியவற்றின் காரணமாக பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பு குறைக்கப்பட்டுள்ளது," என்று நிதியத்தின் ஆசிய, பசிபிக் வட்டார இயக்குநர் கிருஷ்ணா சீனிவாசன் கூறினார்.
சீனாவின் பொருளியல் மந்தநிலையும் ஒன்று சேர்ந்துகொண்டது என்றார் அவர்.
சீனப் பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பு, 4.4 விழுக்காட்டில் இருந்து 3.3 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு வளர்ச்சி 4.6 விழுக்காடாக இருக்கும் என்று நிதியம் எதிர்பார்க்கிறது. முன்பு கூறப்பட்டதைவிட இது 0.5 விழுக்காடு குறைவாகும்.
சீனாவின் கடுமையான கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள், சொத்துச் சந்தை சரிவு ஆகியவை பொருளியல் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
"பொருளியல் வளர்ச்சி குறைந்து வரும் அதே வேளையில், விலைவாசி அதிகரித்து வருவதாகவும் சீனிவாசன் சொன்னார்.
இருப்பினும், சில நாடுகளில் கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படுவதால், வட்டாரத்தில் பொருளாதார நடவடிக்கைகளில் மீள் எழுச்சிக்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் நிதியம் சொன்னது.
"உற்பத்தித் துறை, சுற்றுலாத் துறை ஆகியவற்றின் எழுச்சி காரணமாக மலேசியா, தாய்லாந்து, பசிபிக் தீவு நாடுகள் படிப்படியாக மீட்சி அடையத் தொடங்கியுள்ளது," என்று சீனிவாசன் கூறினார்.

