கியவ்: ஏவுகணைத் தாக்குதலில் உக்ரேனிய போர்க்கைதிகள் பலர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் தொடர்பாக ரஷ்யாவும் உக்ரேனும் ஒன்றைஒன்று சாடுகின்றன.
பிரிவினைவாதிகளின் பிடியில் இருக்கும் டோனட்ஸ் பகுதியில் உள்ள ஒனிவ்கா நகர சிறைச்சாலை மீதான தாக்குதலில் 40 கைதிகள் மாண்டுவிட்டனர், 75 பேர் காயமடைந்ததாக ரஷ்யத் தற்காப்பு அமைச்சு சொன்னது.
அமெரிக்க தயாரிப்பான ஹிமார்ஸ் ரக ஏவுகணைகளைக் கொண்டு உக்ரேன்தான் இத்தாக்குதலை நடத்தியதாக ரஷ்யா சாடுகிறது.
இதை மறுத்துள்ள உக்ரேனிய ஆயுதப் படை, ரஷ்யப் படைகள்தான் கவச எதிர்ப்பு வாகனத்தைக் கொண்டு தாக்கியதாகக் கூறுகிறது.
"இதன் மூலம் ரஷ்யா, உக்ரேனைப் போர்க் குற்றவாளியாக்க பார்க்கிறது.
"மேலும், கைதிகள் துன்புறுத்தப்பட்டதையும் மரண தண்டனைகளையும் இத்தாக்குதல் மூலம் ரஷ்யா மறைக்க முயல்கிறது," என்று உக்ரேனிய ஆயுதப் படை அதிகாரி ஒருவர் சொன்னார்.
ரஷ்யப் பிரிவினைவாத தலைவரை மேற்கோள் காட்டி இன்டர்பேக்ஸ் வெளியிட்டுள்ள செய்தி, சிறையில் 193 பேர் இருந்ததாகவும் அவர்களில் வெளிநாட்டினர் யாரும் இல்லை என்றும் கூறுகிறது.

