மாஸ்கோ: ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரேனிய போர்க்கைதிகள் பலரது மரணம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஐக்கிய நாட்டு மன்றம் மற்றும் செஞ்சிலுவைச் சங்க வல்லுநர்களுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்கத் தயாரிப்பான 'ஹிமார்ஸ்' ஏவுகணையைக் கொண்டு உக்ரேன் ராணுவம் நடத்திய தாக்குதலில் உக்ரேனிய போர்க்கைதிகள் 50 பேர் மாண்டுபோனதாகவும் மேலும் 73 பேர் காயமுற்றதாகவும் ரஷ்யத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
ஆனால், ரஷ்யாவின் குற்றச்சாட்டை உக்ரேன் மறுத்துள்ளது. சிறையில் இடம்பெற்ற அத்துமீறல்களை மறைப்பதற்காக ரஷ்ய ராணுவமே அத்தாக்குதலை நடத்திவிட்டு, இப்போது நாடகமாடுவதாகவும் உக்ரேன் சாடியது.
இந்நிலையில், இருநாடுகளும் இணங்கினால் போர்க்கைதிகள் மரணம் குறித்து விசாரிக்க தன் வல்லுநர்களை அனுப்பத் தயார் என்று ஐநா தெரிவித்துள்ளது.
மக்கள் வெளியேற வேண்டுகோள்
இவ்வேளையில், உக்ரேனின் கிழக்குப் பகுதியான டோன்பாசில் கடும் சண்டை நடந்துவரும் நிலையில், அங்குள்ள தன் நாட்டு மக்களை உடனடியாக வெளியேறும்படி உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்னும் பல நூறாயிரக்கணக்கானோர் டொனட்ஸ்க், லுகான்ஸ்க் மாநிலங்களில் இருப்பதாகக் குறிப்பிட்ட ஸெலன்ஸ்கி, அவர்களில் பலர் அங்கிருந்து வெளியேற மறுத்துவருவதாகவும் சொன்னார்.
இதனிடையே, மின்னல் வேகத்தில் செல்லக்கூடிய 'ஹைப்பர்சோனிக் ஸிர்கான்' ஏவுகணைகளை அடுத்த சில மாதங்களில் ரஷ்யக் கடற்படை பெறும் என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடந்த ரஷ்யக் கடற்படை நாள் விழாவில் கலந்துகொண்டு பேசியபோது அதிபர் புட்டின் இதனை அறிவித்தார்.
ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியைப்போல் ஒன்பது மடங்கு வேகத்தில் செல்லக்கூடியவை. கடந்த ஓராண்டாக போர்க்கப்பல்களில் இருந்தும் நீர்மூழ்கிக்கப்பல்களில் இருந்தும் ரஷ்யா அவற்றைச் சோதித்துப் பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

