புத்ராஜெயா: மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது அடுத்தப் பொதுத் தேர்தலுக்கான நான்கு சிறிய கட்சிகள் அடங்கிய புதிய கூட்டணியை அமைத்துள்ளார். இக்கூட்டணி 120 தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரிகிறது.
கெராக்கான் தானா ஆயர் எனும் அந்தக் கூட்டணியின் வேட்பாளர்கள் மலாய் வாக்குகள் அதிகம் உள்ள தொகுதிகளில் போட்டியிடுவார்கள் எனச் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய மகாதீர் சொன்னார்.
இக்கூட்டணியில் மகாதீரின் பெஜுவாங் தானா ஆயர் கட்சி, முன்னாள் துணைப் பிரதமர் இப்ராஹிம் அலியின் பூமிபுத்ரா பெர்காசா மலேசியக் கட்சியும் (புத்ரா) பாரிசன் ஜமாஆ இஸ்லாமியா செ-மலேசியக் கட்சியும் (பெர்ஜசா) தேசிய இந்திய முஸ்லிம் கூட்டணி கட்சியும் (இமான்) அங்கம் வகிக்கின்றன.
இந்தப் புதிய கூட்டணியில் அரசு சாரா நிறுவனங்களும் கல்வியாளர்களும் உள்ளதாக 97 வயது மகாதீர் சொன்னார். பிரதமர் வேட்பாளராக யாரும் இதுவரை முன்மொழியப்படவில்லை என்றார் அவர்.
மலேசியாவின் 222 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை நடத்த அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை கால அவகாசம் உள்ளது. ஆனால், அடுத்த சில மாதங்களில் பொதுத் தேர்தல் நடத்தப்படக்கூடும் என்று யூகங்கள் வலம் வருகின்றன.