லண்டன்: இங்கிலாந்து நாட்டில் கடந்த ஜூலை முதல் வாரத்தில் வரலாறு காணாத வகையில் கடும் வெப்பம் ஏற்பட தொடங்கியது. தேம்ஸ் நதி உள்ளிட்ட பல்வேறு ஆறுகள், நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு பாலைவனமாக காட்சியளிக்கிறது.
லண்டன் தவிர்த்து சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் போன்ர நாடுகளிலும் நீர்நிலைகள் வற்றி வறட்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 500 ஆண்டுகளில் ஐரோப்பா காணாத வறட்சி இதுவென புவியியலாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக இங்கிலாந்தில் வறட்சியால் பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
1935ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் மிகவும் வறண்ட மாதமாக கடந்த ஜூலை மாதம் திகழ்கிறது. ஜூலை மாதத்தில் மழை பொழிவு மிகவும் குறைவு என இங்கிலாந்து வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜூலையில் வறட்சி நிலவியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள கென்ட் பகுதியின் சீல் நகரில உள்ள லோஸ்ட் கார்ட்னஸ் ஆஃப் செவன்ஓக்ஸ் இயற்கைப்ப்பகுதி பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தின் தெற்கு, மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகள் வறட்சி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
லண்டன் நகரம் முழுதும் வறட்சியான பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. வறண்ட காலநிலைக்கு ஏற்ப நாங்கள் முன்பை விட சிறப்பாக தயாராக இருக்கிறோம், ஆனால் பாதிப்புகள் உள்பட நிலைமையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.

