பேங்காக்: தாய்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ள முன்னாள் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே ஹோட்டல் அறையிலேயே தங்கியிருக்கவேண்டும் என்று அவருக்கு அந்நாட்டு அரசு உத்தரவு கொடுத்துள்ளதாக அறியப்படுகிறது.
அரசியல் போராட்டம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சே, முதலில் மாலத்தீவுக்கும், பின்னர் சிங்கப்பூருக்கும் சென்றார். சிங்கப்பூரில் கோத்தபாயவுக்கான அனுமதி காலம் நேற்று முன்தினம் முடிந்தநிலையில், அவரது வேண்டுகோளை ஏற்று தாய்லாந்தில் தற்காலிகமாக தங்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது.
அதையடுத்து நேற்று முன்தினம் இரவு ஒரு தனி விமானம் மூலம் கோத்தபய ராஜபக்சே, பேங்காக்கில் உள்ள ராணுவ விமான தளத்தில் வந்து இறங்கினார். அவருடன் மேலும் 3 பேர் வந்தனர். கோத்தபாய முதலில் புகெட் நகரில் உள்ள விமான நிலையத்தில் வந்திறங்க முடிவு செய்திருந்தார்.
ஆனால் அதுகுறித்த தகவல் கசியக்கூடும் என்பதால் அந்த திட்டம் மாற்றப்பட்டது. பேங்காக் ராணுவ விமான தளத்தில் இருந்து, பெயர் வெளியிடப்படாத ஹோட்டலுக்கு கோத்தபாய ராஜபக்சே அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு, சாதாரண உடையில் உள்ள தாய்லாந்து சிறப்பு பிரிவு காவல் துறையினர் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு கருதி, ஹோட்டலிலேயே தங்கியிருக்கும்படியும், வெளியே செல்ல வேண்டாம் என்றும் கோத்தபாயவை தாய்லாந்து அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.