லண்டன்: இங்கிலாந்தின் தெற்கு, கிழக்கு, மத்திய வட்டாரங்களின் சில பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளதாக பிரிட்டனின் அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 50 ஆண்டுகளாக இல்லாத வறட்சியைச் சமாளிப்பதன் தொடர்பில் அதிகாரிகளும் வல்லுநர்களும் நடத்திய சந்திப்பைத் தொடர்ந்து அறிவிப்பு இடம்பெற்றதென பிரிட்டனின் தேசிய வறட்சிக் குழு தெரிவித்தது.
பொதுவாக குளிர் நாடாகக் கருதப்படும் பிரிட்டன் தொடர்ந்து வரலாறு காணாத அனல் காற்றை எதிர்நோக்கி வருகிறது.
இங்கிலாந்தின் எட்டு பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீர் நிறுவனங்களால் மேலும் கடுமையான தண்ணீர் சேமிப்பு கட்டுப்பாடுகளைச் செயல்படுத்தமுடியும்.
தோட்டங்களுக்கு நீர் ஊற்றுவது, வாகனங்களைக் கழுவுவதற்குத் தண்ணீரைப் பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளுக்குப் பல நீர் நிறுவனங்கள் தற்காலிகமாகத் தடை விதித்துள்ளன.
இங்கிலாந்து, வேல்ஸ் ஆகியவற்றின் தெற்குப் பகுதிகள் சில படுமோசமான அனல் காற்றை எதிர்நோக்கக்கூடும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்புதான் பிரிட்டனில் வரலாறு காணாத அளவில் வெப்பநிலை அதிகமாகப் பதிவானது.
இந்நிலைக்குப் பருவநிலை மாற்றம்தான் முக்கியமான காரணம் என்று பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் நீரியல் வல்லுநரான டாக்டர் கெம்மா கொக்ஸொன் கூறினார்.

