ட்செட்டினே (மொன்டனெக்ரோ): மொன்டனெக்ரோவில் குடும்பத் தகறாரைத் தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் குறைந்தது 11 பேர் மாண்டனர். சம்பவம் அந்நாட்டின் ட்செட்டினே நகரில் நிகழ்ந்தது.
துப்பாக்கி ஏந்திய ஆடவர் ஒருவர் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவரைச் சுட்டுக்கொன்றதாகவும் அதற்குப் பிறகு அவர் வழிப்போக்கர்களைச் சுட்டதாகவும் அதிகாரிகள் கூறினர். ஆடவரின் வீட்டில் தங்கியிருந்த ஒரு தாயும் அவரின் இரண்டு பிள்ளைகளும் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தாக்குதலை மேற்கொண்ட 34 வயது ஆடவர் பொதுமக்களில் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தாக்குதல் முடிவுக்கு வந்தது. குடும்பத்தில் மூவரைச் சுட்டுக் கொன்ற பிறகு தாக்குதல்காரர் வீட்டிலிருந்து வெளியேறினார். அதன் பின்னர் அவர் தான் பயன்படுத்திய அதே துப்பாக்கியைக் கொண்டு அப்பகுதியில் வசித்த ஏழு குடியிருப்பாளர்களைச் சுட்டுக் கொன்றார்.

