பேங்காக்: தாய்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ள முன்னாள் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே ஹோட்டல் அறையிலேயே தங்கியிருக்கவேண்டும் என்று தாய்லாந்து அரசு அவருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக அறியப்படுகிறது.
அரசியல் போராட்டம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய திரு கோத்தபாய, முதலில் மாலத்தீவுக்கும், பின்னர் சிங்கப்பூருக்கும் சென்றார். சிங்கப்பூரில் அவருக்கான அனுமதி காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவரது வேண்டுகோளை ஏற்று தாய்லாந்தில் தற்காலிகமாக தங்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது.
தனி விமானத்தில் திரு கோத்தபாய, பேங்காக்கில் உள்ள ராணுவ விமானத் தளத்தில் தரையிறங்கினார். அவருடன் மேலும் மூவர் பயணம் செய்தனர்.
திரு கோத்தபாய முதலில் புக்கெட் நகரில் உள்ள விமான நிலையத்தில் வந்திறங்க முடிவு செய்திருந்தார். ஆனால் தகவல் கசியக்கூடும் என்பதால் அத்திட்டம் மாற்றப்பட்டது. பேங்காக் ராணுவ விமானத் தளத்திலிருந்து பெயர் வெளியிடப்படாத ஹோட்டலுக்குத் திரு கோத்தபாய அழைத்து செல்லப்பட்டார்.
பாதுகாப்பு கருதி, ஹோட்டலிலேயே தங்கியிருக்குமாறும் வெளியே செல்லவேண்டாம் என்றும் திரு கோத்தபாயவை தாய்லாந்து அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.