ஹனோய்: வியட்நாமிற்குள் 80.5 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி மதிப்புள்ள அதிவேக ரயில் சேவையை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
1,545 கிலோமீட்டர் நீளம்கொண்ட ரயில் சேவையை அமைப்பதற்கான பரிந்துரைத் திட்டத்தை அடுத்த மாதம் பொலிட்புரோ பிரிவிடம் வியட்நாமின் போக்குவரத்து அமைச்சு சமர்ப்பிக்கும் என்று அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. பொலிட்புரோ, வியட்நாமின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவெடுக்கும் பிரிவு.
வேகமாக வளர்ந்துவரும் தனது பொருளியலுக்கு ஆதரவு வழங்க வட்டார அளவில் உற்பத்தி மையமாக விளங்கும் வியட்நாம் தனது போக்குவரத்துக் கட்டமைப்பை மேம்படுத்த அதிகம் செலவு செய்து வருகிறது.
அதிவேக ரயில் சேவையின் 665 கிலோமீட்டர் நீளம்கொண்ட முதல் இரு பாதைகள் 2032ஆம் ஆண்டுக்குள் செயல்படத் தொடங்கும் என்றும் 2045ஆம் ஆண்டிலிருந்து 2050ஆம் ஆண்டுக்குள் திட்டம் முழுமையாகக் நிறைவுறும் என்றும் அரசாங்கம் தெரிவித்தது.

