பாரிஸ்: ஐரோப்பாவில் இவ்வாண்டு வரலாறு காணாத அளவில் பல பகுதிகள் காட்டுத்தீயால் அழிந்துபோனதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் துணைக்கோள் கண்காணிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் சுமார் 600,000 ஹெக்டர் பரப்பளவைக் கொண்ட நிலம் தீயால் அழிந்துள்ளதென அது கூறியது.
ஐரோப்பாவில் பொதுவாக மெடிடெரனியன் வட்டாரத்தில் உள்ள நாடுகள்தான் காட்டுத்தீயை எதிர்நோக்கும். இவ்வாண்டோ ஐரோப்பாவின் இதர சில நாடுகளிலும் இப்பிரச்சினை எழுந்துள்ளது. ஆஸ்திரியா, பிரான்ஸ், கிரீஸ், போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளில் மூண்ட காட்டுத்தீயால் பலர் வீடுகளைவிட்டு வெளியேற நேரிட்டது.
பல ஐரோப்பிய நாடுகள் இவ்வாண்டு மோசமான அனல் காற்றை எதிர்நோக்கி வருகின்றன. குளிர் நாடுகளாகக் கருதப்படும் பிரிட்டன் போன்றவையும் அனல் காற்றால் அவதிப்படுகின்றன.