பெட்டாலிங் ஜெயா: மலேசியக் கடற்படையில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் சேவையாற்றி ஓய்வுபெற இருந்தபோது அதன் தலைமை அட்மிரலாக பதவி வகித்த அப்துல் அசிஸ் ஜாஃபருக்கு பௌஸ்டெட் ஹெவி இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
அந்தப் பதவியை அவர் ஏற்றுக்கொண்டிருந்தால் தலைமை அட்மிரல் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, அவருக்கு மாதந்தோறும் 80,000 ரிங்கிட் ($24,800) சம்பளத்துடன் வேறு பல சலுகைகளும் கிடைத்திருக்கும்.
ஆனால் கடற்படையில் உயர் பதவி வகித்து பலரால் மதிக்கப்படும் திரு அப்துல் அசிஸ் புதிய பதவியை ஏற்க மறுத்தார்.
பௌஸ்டெட் ஹெவி இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் ஒரு பிரிவான பௌஸ்டெட் கடற்படை பட்டறை மேற்கொண்ட பல நடவடிக்கைகள் மலேசியக் கடற்படையின் நலன்
களுக்கு எதிரானதாக இருந்ததால் வழங்கப்பட்ட பதவியைத் தாம் ஏற்கவில்லை என்றார் 66 வயது திரு அப்துல் அசிஸ்.
"அப்போது திரு அகமது ராம்லி முகம்மது நூர் அப்பதவியை வகித்தார். ஆனால் அந்த நிறுவனத்தின் புதிய நிர்வாகத் துணைத் தலை
வராகப் பதவி ஏற்கப்போவதில்லை என்று நான் முடிவெடுத்தேன்," என்று மலேசிய பொதுக் கணக்
கியல் குழுவிடம் திரு அப்துல் அசிஸ் சாட்சியம் அளித்தார்.
விசாரணை மூலம் கிடைக்கும் விவரங்களை மலேசியப் பொதுக் கணக்கியல் குழு, அந்நாட்டு நாடாளுமன்றத்திடம் சமர்ப்பிக்கும்.
திரு அகமது ராம்லி, மலேசியாவின் முன்னாள் கடற்படைத் தலைவராவார். மலேசியாவில் தற்போது பெரிதும் பேசப்படும் ஒன்பது பில்லியன் ரிங்கிட் ($2.8 பில்லியன்) பெறுமானமுள்ள கடலோரப் போர்க்கப்பல் மோசடியில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இருவரில் திரு அகமது
ராம்லியும் ஒருவர். மற்றொருவர் முன்னாள் கடற்படை கேப்டனான அன்வார் முராட். இவர் பௌஸ்டெட் கடற்படை பட்டறையின் கடலோரப் போர்க்கப்பல் பிரிவுத் திட்டத்தின் இயக்குநராக இருந்தார்.
ஆறு கடலோரப் போர்க்கப்பல்
களைக் கட்ட மலேசிய அரசாங்கம் ஆறு பில்லியன் ரிங்கிட் செலுத்தியதாகவும் ஆனால் அவற்றில் ஒரு கப்பல்கூட மலேசியா
வந்தடையவில்லை என்றும் இம்மாதம் 4ஆம் தேதியன்று பொதுக் கணக்கியல் குழு தெரிவித்ததை அடுத்து, இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.
அந்த ஆறு கடலோரப் போர்க் கப்பல்களைக் கட்ட 2011ஆம் ஆண்டில் முறையான ஏலக்குத்தகை நடத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அவற்றைக் கட்டு வதற்கான ஒப்பந்தம் பௌஸ்டெட் கடற்படை பட்டறைக்கு வழங்கப்பட்டது. ஒப்பந்தப்படி, முதல் போர்க் கப்பலை மலேசியாவுக்கு 2019ஆம் ஆண்டில் விநியோகம் செய்திருக்க வேண்டும். ஆறாவது கப்பலை அடுத்த ஆண்டு விநியோகிக்க வேண்டும். ஆனால் இதுவரை மலேசியாவுக்கு ஒரு கப்பலைக்கூட அந்நிறுவனம் அனுப்பிவைக்கவில்லை. ஒப்பந்தப்படி கடலோரப் போர்க்கப்பல்கள் மலேசியாவை வந்தடையவில்லை என்று அப்போது பிரதமராக இருந்த நஜிப் ரசாக்கிற்கும் அப்போதைய தற்காப்பு அமைச்சர் ஸாஹிட் ஹமிடிக்கும் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளருக்கும், தற்காப்பு, நிதி அமைச்சுகளின் தலைமைச் செயலாளர்களுக்கும் தாம் பல கடிதங்கள் எழுதியதாக ஓய்வுபெற்ற தலைமை அட்மிரல் அப்துல் அசிஸ் தெரிவித்தார். ஆனால் யாரிடமிருந்தும் பதில் வரவில்லை என்றார் அவர். கடலோரப் போர்க்கப்பலின் வடிவமைப்பு குறித்து கடற்படையின் கருத்துகளை ஒப்பந்ததாரர் செவிசாய்க்கவில்லை என்று திரு அப்துல் அசிஸ் அதிருப்தி தெரிவித்தார்.
தொடக்கத்திலிருந்து அனைத்தும் பௌஸ்டெட் கடற்படை
பட்டறைக்குச் சாதகமாக அமைந்ததாக அவர் குறைகூறினார்.
கடற்படை முன்வைத்த கோரிக்கைகளையும் திரு ஸாஹிட் புறக்
கணித்தது தமக்குப் பெரும்
ஏமாற்றத்தைத் தந்ததாக திரு அப்்துல் அசிஸ் தெரிவித்தார்.
இதற்கிடையே, பௌஸ்டெட் கடற்படை பட்டறையின் முன்னாள் உயர் அதிகாரி மீது இன்று
கோலாலம்பூர் நீதிமன்றத்தில்
குற்றம் சுமத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையை விரைவுப்படுத்தும்படி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு மலேசியப் பிரதமர்
இஸ்மாயில் சப்ரி யாக்கோப்
அண்மையில் உத்தரவிட்டார்.
ஆதாரம் கிடைத்தால் உடனடியாக குற்றச்சாட்டைப் பதிவு செய்து சம்பந்தப்பட்டோரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

