சீனாவின் ஆய்வுக்கப்பல் இலங்கையைச் சென்றடைந்தது

சீனாவின் ஆய்வுக்கப்பல் இலங்கையைச் சென்றடைந்தது

2 mins read
2d90b66c-8af8-4397-a137-c4f7cb8c1b58
இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ள சீன ஆய்வுக்கப்பலில் நவீன ரேடார்கள், ஆய்வுக் கருவிகள் உள்ளதால், தமது பாதுகாப்பு குறித்து இந்தியா கவலை தெரிவித்தது. படம்: ஏஎஃப்பி -

கொழும்பு: இந்தியாவின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், சீனாவின் ஆய்வுக்கப்பல் ஒன்று இலங்கையின் அம்பந்தோட்டா துறைமுகத்தைச் சென்றடைந்தது.

இக்கப்பல், அருகில் உள்ள ராணுவத் தளங்கள், அணுமின்சக்தி நிலையங்கள் போன்றவற்றைக் கண்காணிக்கும் திறன் படைத்தது என்று கூறப்படுகிறது. எனவே, தமது பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என இந்தியா கவலையடைந்தது.

பல நவீன ரேடார்கள், ஆய்வுக் கருவிகள் போன்றவை யுவான் வாங் 5 எனப்படும் சீனாவின் இந்த ஆய்வுக்கப்பலில் உள்ளது.

இலங்கை துறைமுகத்தில் இக்கப்பல் நிறுத்தப்பட்டால், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் உளவு பார்க்கப்படும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டது.

எனவே, இந்தக் கப்பலை அம்பந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்த இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.

ஆனால், சீனக் கப்பலுக்கு அனுமதி அளிக்கப்பட்டதில், எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் நன்றிக்கடனாகவும் செய்யப்படவில்லை என்றும் இலங்கை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, ரஷ்யா, ஜப்பான், மலேசியக் கடற்படை கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்படுவதைப் போன்ற, வழக்கமான நிகழ்வுதான் இது என்று அது கூறியுள்ளது.

பிற நாட்டுக் கப்பல்கள், அவ்வப்போது அம்பந்தோட்டா துறைமுகத்தில் எரிபொருள், இதரப் பொருள்களை நிரப்பிக்கொள்ள அனுமதி கேட்பது வழக்கமான ஒன்று என்கிறது இலங்கை.

இலங்கை ராணுவத் தரப்பில், ''அணுசக்தி போர்க்கப்பலுக்குத்தான் நாங்கள் அனுமதி மறுக்கமுடியும். இது அணுசக்தி கப்பல் அல்ல. இந்தியப் பெருங்கடலில் கண்காணிப்பு, வழிச்செலுத்துதல் பணிக்காக இந்தகப்பலை அனுப்புவதாக சீனா தெரிவித்துள்ளது.

"இந்தக் கப்பலின் வருகை குறித்து இந்தியா கவலைப்படுவதை இலங்கை புரிந்து கொள்கிறது. ஆனால் இது வழக்கமான நடைமுறை,'' என்று ஏற்கெனவே கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையே, இக்கப்பல், இலங்கையைச் சென்றடைவதற்கு முதல்நாள் டோர்னியர் விமானத்தை இலங்கையிடம் இந்தியா ஒப்படைத்தது.

இந்தியா-இலங்கை இடையிலான பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த 2018 ஜனவரியில் நடந்தபோது, இலங்கையின் கடல்சார் கண்காணிப்பு திறன்களை மேம்படுத்துவதற்காக 2 டோர்னியர் உளவு விமானங்களை அந்நாடு கோரியிருந்தது.

இதன் அடிப்படையில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இந்தியா ஒரு டோர்னியர் விமானத்தை நேற்று முன்தினம் வழங்கியது.

இந்த நிகழ்ச்சி, கொழும்பு விமான நிலையத்தை அடுத்துள்ள கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நடைபெற்றது.