கியவ்: ரஷ்யாவின் பிடியில் இருக்கும் கிரைமியா ராணுவத் தளத்தில் செவ்வாய்க்கிழமையன்று மீண்டும் வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த சதிச் செயலுக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.
உக்ரேன் மீதான படையெடுப்பில், ரஷ்யாவிற்கு ஆயுத விநியோகம் செய்வதில் இந்த ராணுவத்தளம் முக்கியப் பங்கு வகிக்கின்றது.
ஆயுதக் கிடங்கில் நிகழ்ந்த இந்த வெடிப்பில் இரண்டாவது துணை மின்நிலையம் தீப்பிடித்து எரிந்ததைக் காணொளிகள் காட்டின.
இதனால், வடக்கு கிரைமியாவில் ரயில் போக்குவரத்து தடைபட்டது. அத்துடன் அருகில் உள்ள கிராமத்தில் இருந்து கிட்டத்தட்ட 2,000 பேர் வெளியேற்றப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் கூறுகின்றனர்.
மத்திய கிரைமியாவில் உள்ள இரண்டாவது ரஷ்ய ராணுவத் தளத்தில் புகைமூட்டம் காணப்பட்டதாக ரஷ்ய நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
முதல் வெடிப்பு, கிரைமியா ராணுவத் தளத்தின் மற்றொரு பிரிவில் சென்ற வாரம் நிகழ்ந்தது.
இந்தத் தாக்குதல்கள், ரஷ்யக் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊடுருவி, தாக்குதல் நடத்தும் திறன் உக்ரேனிடம் இப்போது இருப்பதைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது.
முதல் வெடிப்புச் சம்பவங் களுக்குத் தங்கள் தரப்பில் நடந்த தவறே காரணம் என்று கூறிய ரஷ்யா, இரண்டாவது வெடிப்பைச் சதி செயல் என்றும் அதற்கு உக்ரேன்தான் காரணம் என்றும் சாடியுள்ளது.
இந்த வெடிப்புகளுக்கு உக்ரேன் பொறுப்பேற்கவில்லை என்றாலும் தான் காரணம் அல்ல என்று மறுக்கவும் இல்லை.
ஆனால், வெடிப்புகளால் உக்ரேன் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பொதுமக்கள் யாரும் கிரைமியாவை ஒட்டிய பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என்று உக்ரேன் எச்சரித்துள்ளது.