கோலாலம்பூர்: மலேசியக் கடற்படைக் கப்பல்களைக் கட்டி முடிக்க அரசாங்கம் ஒட்டுமொத்தமாக 11.145 பில்லியன் ரிங்கிட் செலவிட வேண்டி இருக்கும் என்று விசாரணைக் குழுவின் அறிக்கை கூறுகிறது.
முன்பு இந்தக் கப்பல்களைக் கட்டுவதற்காக ஒப்புக்கொள்ளப்பட்டிருந்த 9 பில்லியன் ரிங்கிட்டைவிட குறிப்பிடத்தக்க அளவு அதிகமாகும்.
சர்ச்சைக்குரிய போர்க்கப்பல் ஒப்பந்த ஊழல் தொடர்பான பிரச்சினைகளை விசாரித்த அரசாங்கக் குழுவின் அறிக்கை, நேற்று பொது அறிக்கையாக வெளியிடப்பட்டது.
எல்சிஎஸ் ஊழல் எனும் இந்த விவகாரம் பற்றிய விசாரணைக் குழுவின் கொள்முதல், நிர்வாகம், நிதி அறிக்கையின்படி, முக்கிய ஒப்பந்தக்காரரான பௌஸ்டெட் நேவல் ஷிப்யார்ட் எனும் பிஎன்எஸ் நிறுவனம், 2019ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி எழுதியிருந்த கடிதத்தில், ஆறு கப்பல்களையும் முடிக்க கூடுதலாக 1.416 பில்லியன் ரிங்கிட் கோரியிருந்தது.
ஒருங்கிணைந்த தளவாட ஆதரவு எனும் ஐஎல்எஸ் உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்காக பிஎன்எஸ் நிறுவனத்திற்கு கூடுதலாக 800 மில்லியன் ரிங்கிட் கொடுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஐஎல்எஸ் உபகரணத்திற்கான செலவு, எல்சிஎஸ் ஒப்பந்தத்தின் விலையை 9.7286 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்தது.
முக்கிய உபகரணங்களின் பரிமாற்றம் காரணமாக, ஆறு கப்பல்களின் கட்டுமானச் செலவு மேலும் அதிகரிக்கும் என்று விசாரணைக் குழு எதிர்பார்க்கிறது. அது காலதாமதத்திற்கும் வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 2020ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டிய ஆறு கப்பல்களில் ஒன்றுகூட இதுவரை முடிக்கப்படவில்லை.

