கீவ்: உக்ரேனின் கார்கிவ் நகரில் ரஷ்ய படைகள் மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
உக்ரேன் மீது ரஷ்ய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுத்து வருகிறது. தற்போது வரை தொடர்ந்து வரும் இந்த தாக்குதலுக்கு உக்ரேன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரால் உக்ரேனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர்.
இரு தரப்பிலும் மிகப்பெரிய அளவில் உயிர்சேதமும் ஏற்பட்டுள்ளது. உக்ரேன் மீது தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வரும் ரஷ்ய ராணுவம், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி வருகிறது. இதற்கிடையே, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரேனிய பகுதிகளில் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. அங்குள்ள கார்கிவ் நகரில் கடந்த திங்கட்கிழமை நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் 6 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், நேற்று மீண்டும் கார்கிவ் நகரின் மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணைகள் மற்றும் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய படைகளின் தாக்குதல்களுக்கு உக்ரேனிய படைகள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றன.