சியோல்: தென் கொரியாவில் கொரொனா தொற்று நான்கு மாதங்களில் இல்லாத அளவு உயர்வு கண்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி 24 மணி நேரத்தில் மொத்தம் 180,803 தொற்றுகளும் 42 இறப்புகளும் பதிவாகின.
சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் ஆல்பா, காமா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், ஒமிக்ரான் என உருமாற்றம் அடைந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் ஒமிக்ரான் தொற்றின் வருகையால் உலகின் பல நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது.
குறிப்பாக ஜப்பான், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் ஒமிக்ரான் பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவில் பல மாதங்களுக்குப் பிறகு திடீரென கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 200,000-ஐ நெருங்கியுள்ளது என கொரிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் 84,128 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒரே நாளில் பாதிப்பு இரு மடங்காக உயர்ந்துள்ளது. இது அங்கு கடந்த ஏப்ரல் 13ஆம் தேதிக்கு பிறகு பதிவான அதிகபட்ச பாதிப்பு எண்ணிகையாகும்.
ஏப்ரல் 13ஆம் தேதி 195,387 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்றை பாதிப்பை தொடர்ந்து தென்கொரியாவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 21,682,816-ஐ கடந்துள்ளது.
தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தாலும், உயிரிழப்பு குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. அதே சமயம் தொற்றை கட்டுப்படுத்த தேசிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து விளக்கம் அளிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.