ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் காட்டுத்தீயில் சிக்கி குறைந்தது 37 பேர் இறந்துவிட்டனர்; பலர் காயமடைந்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை அதிகாலையில் இருந்து வடகிழக்கிலுள்ள 21 மாநிலங்களில் குறைந்தது 118 இடங்களில் தீப்பிடித்து எரிந்ததாக உள்துறை அமைச்சு தெரிவித்தது.
காட்டுத்தீயில் கிட்டத்தட்ட 2,590 ஹெக்டர் எரிந்துவிட்டது; 300க்கும் மேற்பட்டோர் வீடுகளைவிட்டு வெளியேறினர்.
வியாழக்கிழமைக்குள் தீ பெரும்பாலும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் மீட்புப் பணிகள் நடந்துவருவதால் பலி எண்ணிக்கை உயரலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் கூறினர்.
இதனிடையே, நாட்டின் கிழக்குப் பகுதியில் வெப்பநிலை 47.1 டிகிரி செல்சியஸ்வரை உயரக்கூடும் என்று அல்ஜீரிய வானிலை அலுவலகம் எச்சரித்துள்ளது.

