பெய்ஜிங்: சீனா இவ்வாண்டில் முதன்முறையாக தேசிய அளவிலான வறட்சி எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.
காட்டுத்தீயை அணைக்கவும் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து யாங்ட்ஸி ஆற்றுப்படுகையில் பயிர்களைக் காக்கவும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த தேசிய ‘மஞ்சள்’ எச்சரிக்கை, தென்மேற்கில் சிச்சுவானில் இருந்து ஷாங்காய் நகரம் வரையிலும் பல வட்டாரங்களில் கடந்த பல வாரங்களாகவே வெயில் கொளுத்தி வருகிறது. பருவநிலை மாற்றமே இதற்குக் காரணம் என அரசாங்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
மத்திய சீனாவின் ஜியாங்சி மாநிலத்தில் உள்ள போயாங் ஏரியில் இந்தக் காலகட்டத்தில் வழக்கமாக இருப்பதைப்போல நான்கில் ஒரு பங்கு அளவே நீர் இருக்கிறது.
தென்மேற்கிலுள்ள சொங்சிங் வட்டாரத்தில் 66 ஆறுகள் வறண்டுவிட்டன. சொங்சிங்கில் இந்த ஆண்டு மழை 60% குறைவாகப் பெய்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் மண்ணில் ஈரப்பதம் வெகுவாகக் குறைந்துவிட்டது.
பெய்பெய் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
எளிதில் பாதிக்கப்படும்பயிர்களைக் காக்கவும் இலையுதிர்கால அறுவடைக்கு முன்னர் இழப்புகளை ஈடுசெய்யும் வகையில் பயிரிடும் பரப்பளவை விரிவுபடுத்தவும் சொங்சிங் விவசாயத் துறை வல்லுநர் குழுக்களை அமைத்துள்ளது.
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் விளைநிலங்களுக்கு கால அட்டவணைப்படி நீர் வழங்க நீர்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.