66 ஆறுகள் வறண்டன; கொளுத்தும் வெயிலில் இருந்து பயிர்களைக் காக்க பெருமுயற்சி
பெய்ஜிங்: சீனா இவ்வாண்டில் முதன்முறையாக தேசிய அளவிலான வறட்சி எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.
காட்டுத்தீயை அணைக்கவும் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து யாங்ட்ஸி ஆற்றுப்படுகையில் பயிர்களைக் காக்கவும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த தேசிய 'மஞ்சள்' எச்சரிக்கை, தென்மேற்கே சீச்சுவானில் இருந்து ஷாங்காய் நகரம் வரையிலும் பல வட்டாரங்களில் கடந்த பல வாரங்களாகவே வெயில் கொளுத்தி வருகிறது. பருவநிலை மாற்றமே இதற்குக் காரணம் என்று சீன அரசாங்கம் சொல்கிறது.
மத்திய சீனாவின் ஜியாங்சி மாநிலத்தில் உள்ள போயாங் ஏரியில் இந்தக் காலகட்டத்தில் வழக்கமாக இருப்பதைப்போல நான்கில் ஒரு பங்கு அளவே நீர் இருக்கிறது.
தென்மேற்கிலுள்ள சொங்சிங் வட்டாரத்தில் 66 ஆறுகள் வறண்டுவிட்டன. சொங்சிங்கில் இந்த ஆண்டு மழை 60% குறைவாகப் பெய்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் மண்ணில் ஈரப்பதம் வெகுவாகக் குறைந்துவிட்டது.
பெய்பெய் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
சொங்சிங் வட்டாரத்தில் உள்கட்டமைப்பு, அவசரகால சேவைகள் கடும் நெருக்கடிக்குள்ளாகிஇருக்கின்றன. காட்டுத்தீ காரணமாக தீயணைப்புப் படையினர் எப்போதும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
வெப்பத் தாக்கத்தால் பாதிக்கப்படுவது கூடியுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடுமையான பாதுகாப்பு அபாயங்களை எதிர்கொண்டு வருவதால் அடுத்த அறிவிப்பு வெளியாகும்வரை எரிவாயு விநியோகத்தை நிறுத்திவைப்பதாக ஃபியூலிங் மாவட்ட நிர்வாகம் வாடிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட வாய்ப்புள்ள பயிர்களைக் காக்கவும் இலையுதிர்கால அறுவடைக்கு முன்னர் இழப்புகளை ஈடுசெய்யும் வகையில் பயிரிடும் பரப்பளவை விரிவுபடுத்தவும் சொங்சிங் விவசாயத் துறை வல்லுநர் குழுக்களை அமைத்துள்ளது.
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் விளைநிலங்களுக்கு கால அட்டவணைப்படி நீர் வழங்க நீர்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கடும் வெயிலால் ஜூலை மாதத்தில் மட்டும் 2.73 பில்லியன் யுவான் (S$56 மில்லியன்) நேரடிப் பொருளியல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் 5.5 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் சீன நெருக்கடிநிலை அமைச்சுத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, தேசிய வானிலை மையம் தொடர்ந்து 30வது நாளாக அதிக வெப்பநிலை சிவப்பு எச்சரிக்கையை நேற்று விடுத்தது. வரும் 26ஆம் தேதியில் இருந்து வெப்ப அலை குறையத் தொடங்கும் என்று அம்மையம் முன்னுரைத்துள்ளது.