வெல்லிங்டன்: நியூசிலாந்தின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடந்த நான்கு நாள்களாகத் தொடர்ந்து பெய்துவந்த சாரல் மழை நேற்று சற்று ஓய்ந்தாலும் இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் வீடுகளை விட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆகக் கடைசியாக 100 பேர் இரவோடு இரவாக பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அந்நாட்டின் தென்தீவு நகரான நெல்சன்தான் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் கடந்த ஒரு வாரத்தில் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் சில வீடுகள் மீண்டும் வசிக்க தகுதியில்லாத அளவுக்குச் சேதமடைந்துள்ளன. கடும் வெள்ளம் காரணமாக வடக்குத் தீவின் நகரங்களின் சாலைகளும் வீடுகளும் நீரில் மூழ்கிக் கிடக்கின்றன. "கடந்த வாரத்தில் இருந்ததுபோல இப்போது இல்லை. பெரும்பாலான மழைப்பொழிவு நாட்டின் மேற்குப் பகுதியில்தான் நிகழ்ந்துள்ளது," என்று நியூசிலாந்தின் வானிலை ஆய்வு நிலையம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக, நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் மழைப் பொழிவு மெதுவடைந்த பிறகு அது தனது எச்சரிக்கையை மீட்டுக்கொண்டது. நேற்று நெல்சன் நகரில் இன்னும் அதிகமான மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன என்று தெரிவித்த அவசரகால நிர்வாக அமைச்சர் கீரன் மெக்அனுல்டி, மீட்பு நடவடிக்கைகளில் உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அவர்களின் உதவி இல்லையேல் இந்நடவடிக்கையை மேற்கொள்ள அதிக காலம் எடுத்திருக்கும், சிரமமாகவும் இருந்திருக்கும் என்றார்.

