கியீவ்: உக்ரேனின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஒடேசாவில் இருந்த ஆயுதக் கிடங்கைத் தனது ஏவுகணைகள் தகர்த்துவிட்டதாக ரஷ்யா நேற்று தெரிவித்தது.
அந்த ஆயுதக் கிடங்கில்
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகள் இருந்ததாக அது கூறியது.
அதுமட்டுமல்லாது, போர் விமானங்களை எதிர்கொண்டு அவற்றைச் சுட்டு வீழ்த்தும் கட்டமைப்பும் ஏவுகணைத் தாக்குதலில் அழிந்ததாக ரஷ்யா தெரிவித்தது.
அந்தக் கட்டமைப்பை மேற்கத்திய நாடுகள் தயாரித்து
உக்ரேனுக்கு வழங்கியதாக அது கூறியது.
இதற்கிடையே, ரஷ்யா பாய்ச்சிய இரண்டு ஏவுகணைகள் கடலுக்கு மேல் இருந்தபோதே அவற்றைச் சுட்டு வீழ்த்தியதாக உக்ரேனின் ஒடேசா பிரிவு ராணுவம் தெரிவித்தது.
ஆனால் விவசாயம் தொடர்பான இடங்களை மூன்று ஏவுகணைகள் தகர்த்தியதாக அது கூறியது.
ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலில் யாரும் காயமடையவில்லை என்று உக்ரேனிய ராணுவம் தெரிவித்தது.
இந்தத் தகவல்களை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் உடனடியாக உறுதி செய்ய முடியவில்லை.
உக்ரேனின் கெர்சன் பகுதியில் உக்ரேனிய ராணுவம் நிறுத்தி வைத்திருந்த இரண்டு எம்777 ஹொவைட்சர்களைத் தனது படைகள் அழித்து விட்டதாக ரஷ்யாவின் தற்காப்பு அமைச்சு நேற்று கூறியது.
அத்துடன் உக்ரேனிய ராணுவத்துக்குச் சொந்தமான எரி
பொருள் கிடங்கும் அழிந்ததாக அது கூறியது. அதில் 100 டன்னுக்கும் அதிகமான டீசல் இருந்ததாக அறியப்படுகிறது.
இந்நிலையில், உக்ரேனின் சுதந்திர தினம் நெருங்குவதாகவும் அதனை முன்னிட்டு ரஷ்யா தாக்குதல்களைத் தீவிரப்படுத்தக்கூடும் என்றும் உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி எச்சரித்தார்.

