ரஷ்யா, உக்ரேனில் மூட்டிய போர்த் தீயின் உக்கிரம் இன்னும் தணியவில்லை
கியவ்: ரஷ்யா உக்ரேன் மீதான தாக்குதல்களைத் தொடங்கி ஆறு மாதங்களானபோதும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. இன்னும் உக்ரேனில் பல இடங்களை அது கடுமையாகத் தாக்கி வருகிறது.
சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து தனி நாடான 31வது ஆண்டு நிறைவை உக்ரேன் நாளை அனுசரிக்க இருக்கும் நிலையில் நேற்றுகூட சில இடங்களில் தாக்குதல் தொடர்ந்தது.
நிக்கோபோல் நகரில் நேற்று குண்டு மழை பொழிந்தது. முன்னதாக, சென்ற வார இறுதியில் கருங்கடல் துறைமுக நகரான ஒடிசா ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்கானது.
இவ்வேளையில், சுதந்திர தினத்துக்கு முன்னர் மேலும் தீவிரமான தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் என்று உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி எச்சரித்துள்ளார்.
சென்ற பிப்ரவரி 24ஆம் தேதி போரைத் தொடங்கிய ரஷ்யா, நாளை ஆகஸ்ட் 24ஆம் தேதியில் மோசமான தாக்குதலுக்கு முயற்சி செய்யக்கூடும் என்றும் சாத்தியமான அனைத்து மிரட்டல்கள் குறித்தும் தாம் பிரெஞ்சு அதிபர் இமேனுவல் மெக்ரோனிடம் கலந்தாலோசித்திருப்பதாகவும் திரு ஸெலன்ஸ்கி கூறினார். துருக்கி உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கும் ஐக்கிய நாட்டு நிறுவனத்திற்கும் இதுகுறித்துத் தகவல் அனுப்பி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆறு மாதங்களில் இருதரப்பிலும் இழப்புகள் அதிகம் என்பது கண்கூடு. ஆனாலும் சண்டை நிறுத்தத்திற்கான அறிகுறி இன்னும் புலப்படவில்லை.
குளிர் காலம் தொடங்கிவிட்டால் உக்ரேனியர்கள் மேலும் சிரமப்பட நேரிடலாம் என்பதை ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர்.
உக்ரேனின் தற்காப்புத் திறன் குறித்த மாஸ்கோவின் மதிப்பீடு பொய்யாகிப் போனாலும் போர் நீடித்தால் அதற்கான செலவுகளைச் சமாளிக்க அது தயாராக இருப்பதுபோல் தோன்றுகிறது.
கிரைமியாவை எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இணைத்தபோதே ரஷ்யாமீது தடைகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் அது மாற்று ஏற்பாடுகளைச் செய்துகொண்டது.
ரஷ்யப் பொருளியல், தொழில்துறை, பொதுமக்கள் எனப் பல தரப்புகளும் இதற்குப் பழகிக்கொண்டனர் என்றே சொல்லலாம்.
மேலை நாடுகள் தொடர்ந்து நிதியோடு ஆயுதங்களையும் தந்து உதவினால் ரஷ்ய ராணுவ ஆதிக்கத்தைப் படிப்படியாகத் துடைத்தொழிக்கலாம் என்கிறார் ஸெலன்ஸ்கி. போர் நெடுநாள் நீடித்தால் ரஷ்ய அதிபருக்கு உள்நாட்டில் பொதுமக்கள் ஆதரவு முழுமையாகக் கிட்டாது என்பதையும் மறுப்பதற்கு இல்லை என்கின்றனர் அரசியல் கவனிப்பாளர்கள்.

