மணிலா: பிலிப்பீன்சில் கொவிட்-19 கிருமிப்பரவலால் ஈராண்டுகளாகப் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. தற்போது புதிய கல்வி ஆண்டின் தொடக்க நாளான நேற்று மில்லியன் கணக்கான மாணவர்கள் மீண்டும் நேரடி வகுப்புகளில் பயில அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிகள் நீண்டகாலம் மூடப்பட்டிருந்தால் நாட்டில் கல்வி தொடர்பான நெருக்கடி மோசமாகும் என்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து நேற்று அவை மீண்டும் திறக்கப்பட்டன.
ஏற்கெனவே, ஒரு வகுப்பில் அதிகமான மாணவர் எண்ணிக்கை, பழங்காலக் கற்பித்தல் முறை, வறுமை, பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமை போன்ற காரணங்களால் பிலிப்பீன்சில் கல்வி நெருக்கடி நிலவுவதாகக் குறைகூறப்படுகிறது.
கிருமிப்பரவலை முன்னிட்டு பள்ளிகள் மூடப்பட்டிருந்த காலகட்டத்தில் இணைய வகுப்புகள், அச்சிடப்பட்ட பாடங்களைத் தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் ஒளிபரப்புதல் போன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.
நாட்டின் புதிய அதிபராக இரு மாதங்களுக்கு முன்னர் பொறுப்பேற்றுக்கொண்ட திரு ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியர் இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் பள்ளிகளைத் திறக்கக் கெடு விதித்திருந்தார்.
இதற்கு உதவும் வகையில், அரசாங்கம் தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்தியதுடன் இந்த ஆண்டு இறுதிவரை மாணவர்கள் பொதுப் போக்குவரத்தில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்றும் அறிவித்தது.
சென்ற சனிக்கிழமை முதல் செலவுகளைச் சமாளிக்கத் திணறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரொக்க உதவியையும் பிலிப்பீன்ஸ் அரசாங்கம் வழங்கிவருகிறது.

