கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு எதிரான குற்றத்தீர்ப்பையும் தண்டனையையும் நேற்று மலேசிய உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியதை அடுத்து அவர் கோலாலம்பூருக்கு வெளியே இருக்கும் காஜாங் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர், 12 ஆண்டு காலம் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
இதனிடையே, தன்னுடைய தந்தைக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையும் அவர் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டதையும் அறிந்து அதன் தொடர்பில் நஜிப்பின் புதல்வியான நூர்யானா நஜ்வா (படம்: தி ஸ்டார்) நேற்று இன்ஸ்டகிராமில் கருத்து தெரிவித்தார்.
நாங்கள் கடுமையான போராட்டங்களை மேற்கொள்ளாமல் இருந்திருக்கலாம். மலேசிய நீதிமுறையில் முழு நம்பிக்கையை நாங்கள் வைத்திருந்து இருக்கலாம். இருந்தாலும் உங்களுக்கு (நஜிப்புக்கு) இன்று நீதி கிடைக்கவில்லை. உங்களுக்கு போராடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் உறுதிபட கூறுகிறேன். நீதி கிடைக்கும் வரை நானும் என்னுடைய தாயாரும் குடும்பத்தினரும் மக்களும் ஒருபோதும் ஓயப்போவதில்லை என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.
இதனிடையே, மத்திய நீதிமன்ற தீர்ப்பை அடுத்து நேற்று மாலை சுமார் 6.10 மணிக்கு நஜிப் ரசாக் காஜாங் சிறையைச் சென்றடைந்தார்.
முன்னதாக அவருடைய வாகனங்கள் அந்த சிறைச்சாலை வளாகத்திற்குள் நுழைய முடியாமல் திருப்பிவிடப்பட்டதைக் காண முடிந்தது. சிறைச்சாலை நுழைவு வாயில் அருகே சாலையோரமாக பலரும் கூடி இருந்ததையும் காண முடிந்தது.

