அமெரிக்காவின் டெக்சஸில் நடந்த பள்ளி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை முறியடிக்க காவல்துறையினரை வழிநடத்திய அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் 19 சிறுவர்களும் இரண்டு ஆசிரியர்களும் உயிரிழந்தனர்.
மாவட்ட காவல்துறை தலைவர் பீட் அரேடொண்டோவை பணிநீக்கம் செய்யும் முடிவை உவால்டே பள்ளி மன்றம் எடுத்தது. மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த குரவில் இந்த முடிவை எடுத்தனர்.
தாக்குதலை முறியடிக்க அரேடொண்டோ இன்னும் அதிகம் செய்திருக்கலாம் என்று அவர்கள் கூறினர். அவர் பல தவறான முடிவுகளை எடுத்ததாக அவர்கள் கருத்துரைத்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய 18 வயது இளையர் பள்ளிக்குள் 40 நிமிடங்கள் முதல் 60 நிமிடம் வரை இருந்ததாகவும் அப்போது காவல்துறையினர் உள்ளே நுழையாமல் இருந்தனர் என்றும் விசாரணையில் தெரியவந்தது. தாமதிக்காமல் காவல் துறையினர் வகுப்பறைக்குள் சென்றிருந்தால், பல உயிர்கள் காப்பாற்றபட்டிருக்கலாம் என கூறப்பட்டது.