அமெரிக்க அதிபரின் அறிவிப்பால் 43 மில்லியன் அமெரிக்கர்களுக்கு நற்செய்தி
வாஷிங்டன்: குறைந்த, நடுத்தர வருமானம் ஈட்டுவோருக்கு US$10,000 (S$14,000) மாணவர் கல்விக் கடனைத் தள்ளுபடி செய்யும் திட்டத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இது 43 மில்லியன் வரையிலான அமெரிக்கர்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு தரும்.
அவர்களில் பெரும்பாலானோர் ஆண்டுக்கு US$75,000க்கும் குறைவாக வருமானம் ஈட்டுகின்றனர். கடன் தள்ளுபடிக்கு தகுதிபெற ஒருவர் ஆண்டு வருமானமாக US$125,000க்கும் குறைவாக ஈட்ட வேண்டும்.
நாடாளுமன்றம் மற்றும் செனட் சபையின் கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக்கொள்ள ஜனநாயகக் கட்சியினருக்கு இத்திட்டம் கைகொடுக்கக்கூடும் என்றாலும், வெவ்வேறு தரப்பினர் இதைக் குறைகூறவும் செய்கின்றனர்.
கடன் தள்ளுபடி அதிகமாக இருப்பதாக குடியரசுக் கட்சியினர் விமர்சிக்கின்றனர்.
கடன் தள்ளுபடிக்கு ஆதரவுக் குரல் தருவோர் இத்தொகை குறைவாக இருப்பதாகக் கூறுகின்றனர். இத்திட்டம் பணவீக்கத்தை அதிகரிக்கக்கூடும் என்பது பொருளியல் நிபுணர்கள் சிலரின் கருத்து.
கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக, மாணவர் கடன் தவணையை டிரம்ப் நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. திரு பைடன் அதை ஆண்டிறுதி வரை நீட்டித்துள்ளார்.
குறைந்த வருமானம் ஈட்டுவோர் மாதந்தோறும் செலுத்தும் கடன் தொகையைக் குறைப்பது உள்ளிட்டவை இதர சீர்திருத்தங்களில் சில.
"குறிப்பிட்ட சில பிரிவினரை இலக்காகக் கொண்டு வழங்கப்படும் இந்த உதவி, பெருந்தொற்று காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த, நடுத்தர வருவாய் ஈட்டுவோருக்கானது," என்று வெள்ளை மாளிகையில் திரு பைடன் கூறினார்.
மாணவர் கல்விக் கடனை ரத்து செய்யும் இத்திட்டம், வசதி குறைந்தவர்களுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே நிலவும் இன ரீதியிலான இடைவெளியைக் குறைக்க உதவும் என வெள்ளை மாளிகை வாதிட்டது.
கறுப்பின மாணவர்களே பொதுவாக அதிக கல்விக் கடனைப் பெறுகின்றனர்.

