புதுடெல்லி: சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான 'கிக் பாக்ஸிங்' போட்டியில் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய வீரர் யோரா டேட், 24, உயிரிழந்தார். அவர் இறந்துவிட்டதாக மருத்துவர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் கேசவ் முடல் எனும் வீரர் யோராவின் தலையில் உதைத்ததில் யோரா மயங்கி விழுந்தார்.
யோராவிற்கு உடனடியாக முதலுதவி வழங்கப்பட்டது. மூளையில் அவசர அறுவை சிகிச்சை செய்வதற்காக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், இரு நாள்கள் கழித்து சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார்.
அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த தற்காப்புக் கலை வீரரான யோரா, 'கிக் பாக்ஸிங்' அமைப்புகளுக்கான உலகச் சங்கத்தின் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்று இருந்தார்.
அவரது மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடலைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

