பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சிறைக்கு அனுப்பப்பட்டாலும் அம்னோ கட்சியின் கதை நிறைவடைந்துவிட்டதாக அர்த்தம் இல்லை என்று அதன் தலைவர் ஸாஹிட் ஹமிடி கூறியுள்ளார். 69 வயது திரு நஜிப், மலேசியாவின் ஆளும் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் அம்னோவின் முன்னாள் தலைவரும் ஆவார்.
"தங்களின் திட்டங்களையும் தவறான உத்திகளையும் இனி எளிதில் செயல்படுத்தலாம் என்று பலர் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்கள் தவறாகக் கணித்துள்ளனர்," என்று கட்சியைத் தாழ்வாக விமர்சிப்பவர்களைப் பற்றித் திரு ஸாஹிட் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார். அவரும் சட்டவிரோதமாகப் பணம் பறித்ததன் தொடர்பில் சில குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
"நாட்டை மீண்டும் செழிக்கவைக்கும் போராட்டத்திற்கு நஜிப் விவகாரம் ஒரு முடிவாக இருக்காது. மாறாக, நாங்கள் ஒன்றாக பணியில் ஈடுபட்டு கூடுதல் நம்பிக்கையுடன் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட இது உந்துதலாக அமையும்," என்று அவர் சொன்னார்.
சிறையில் இருந்தாலும் முக்கிய அரசியல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் திரு நஜிப்பிற்கு இருந்து வருவதாக மலாய் மெயில் நாளிதழில் வெளியான செய்தி குறிப்பிட்டது.
இதற்கிடையே, திரு நஜிப்பிற்கு மன்னிப்பு வழங்குவதன் தொடர்பில் மலேசிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா நெருக்குதலை எதிர்நோக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
திரு நஜிப்பிற்கு மன்னிப்பு வழங்கினால் மாமன்னர் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கவேண்டும் என்பவர்களின் கண்டனத்திற்கு ஆளாகலாம். அதே வேளையில் திரு நஜிப்பிற்கு வாக்காளர்களிடையேயும் கட்சி உறுப்பினர்கள் மத்தியிலும் தொடர்ந்து ஆதரவு இருந்து வருகிறது.

