பேங்காக்: அனைத்துலக சந்தையில் அரிசி விலையை உயர்த்துவதற்கு ஒன்றுடன் ஒன்று ஒத்துழைக்க தாய்லாந்தும் வியட்னாமும் ஒப்புக்கொண்டுள்ளதாக தாய்லாந்து விவசாயத் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
சென்ற மே மாதம் முதல் இதுகுறித்து இருநாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்ததாக தாய்லாந்து விவசாயத் துறை அமைச்சரின் ஆலோசகர் அலோங்கான் போன்லாபோட் சொன்னார்.
உலகச் சந்தையில் தங்களின் செல்வாக்கை அதிகரிப்பதும் தம் நாட்டு விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதுமே, ஏற்றுமதி அரிசியின் விலையை உயர்த்துவதன் நோக்கம் என்று தாய்லாந்து செய்தித் தொடர்பாளர் சொன்னார்.
வியட்னாம் தரப்பில் இருந்து இது பற்றி எந்தவித தகவலும் இல்லை.
மேலும் எப்போது முதல் இந்த விலை உயர்வு நடப்புக்கு வரும் என்பதும் தெளிவாக தெரியவில்லை.
அனைத்துலக அளவில் இரு நாடுகளின் அரிசி உற்பத்தி 10 விழுக்காடாகவும் அரிசி ஏற்றுமதி 26 விழுக்காடாகவும் உள்ளது என்று அமெரிக்க விவசாயத் துறையின் புள்ளிவிவரம் கூறுகிறது.

