சீனத் தலைநகர் பெய்ஜிங்கைச் சுற்றியுள்ள வட்டாரங்கள் இன்று(ஆகஸ்ட் 30) தனிமைக் கட்டுப்பாட்டுகளுக்கு உள்ளாகின.
சீனாவில் ஒரு கொவிட்-19 சம்பவம் கூட வரக்கூடாது என்ற முனைப்புடன் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். அதன் பொருட்டு கொவிட்-19 சம்பவம் பரவாமல் இருக்க கடும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆண்டு கூட்டம் கூடியவிரைவில் நடைபெறவுள்ளது. கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக தலைநகரைச் சுற்றியுள்ள ஹெனெய் மாநிலத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட நான்கு மில்லியன் மக்களுக்கு வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
அருகில் உள்ள தியான்ஜின் பகுதியில் வாழும் 13 மில்லியன் மக்கள் உள்ளூர் நேரப்படி கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். அங்கு மிதமான கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் அண்மையில் பதிவாகின.
இதற்கிடையே கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த கடும் முயற்சிகளையும் கட்டுப்பாடுகளையும் அமல்படுத்தி வந்தபோதிலும் சீனா தனது ஒவ்வொரு மாநிலத்திலும் கொவிட்-19 நோய்க்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறது என்று புளூம்பர்க் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
சீனாவின் 31 மாநிலங்களிலும் குறைந்தது ஒரு கொவிட்-19 சம்பவம் கடந்த 10 நாள்களில் பதிவாகியுள்ளது.

