பாக்தாத்: ஈராக்கில் அதிக செல்வாக்குமிக்க சமயப் போதகர் முக்தாடா அல் சடார் அரசியலிலிருந்து விலகியதை அடுத்து அந்நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் வன்முறை வெடித்துள்ளது.
பாதுகாப்புப் படையினருடன் அல் சடாரின் ஆதரவாளர்கள் மோதியதை அடுத்து குறைந்தது 23 ஆர்ப்பாட்டக்காரர்கள் மாண்டனர். ஈராக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் இஸ்லாத்தின் ஷியா பிரிவின் சமயப் போதகரான அல் சடார் பெரும்பாலான தொகுதி
களைக் கைப்பற்றினார்.
ஆனால் ஈரானின் ஆதரவைப் பெற்ற மற்ற ஷியா கட்சிகள் அவருடன் கூட்டணி அமைக்க விரும்பாததால் அல் சடாரால் அரசாங்கத்தை அமைக்க முடியாமல் போனது.
நீண்ட இழுபறிக்குப் பிறகு அரசியலிலிருந்து விலகுவதாக அல் சடார் அறிவித்தார்.
அல் சடாரின் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் அரசாங்க மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்தனர்.
இதனால் அமைச்சரவைக் கூட்டம் ரத்து செய்யப்படும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, நாடு தழுவிய ஊரடங்கை ஈராக்கிய ராணுவம் அறிவித்தது.
ஈராக்கில் வன்முறை தலை
விரித்தாடுவதால் அந்நாட்டுக்குச் செல்ல இருந்த விமானச் சேவைகளை ஐக்கிய அரபு சிற்றரசுகள் ரத்து செய்துள்ளன.
ஈராக்குடனான எல்லையை ஈரான் மூடியது. இதனால் ஷியா முஸ்லிம்களின் புனிதத் தலமான கர்பாலா நகரக்கு யாத்திரை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த மில்லியன்கணக்கான யாத்திரீகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாக்தாத்துக்குத் தெற்கில் உள்ள நஜாஃப் நகரிலிருந்து ஈரானிய யாத்திரீகர்களை வெளியேற்ற இரண்டு அவசரகால விமானங்களை ஈரான் அனுப்பத் திட்டமிட்டுள்ளது. ஈராக்கில் இருக்கும் தனது நாட்டினர் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்று குவைத் வலியுறுத்தியுள்ளது.
அதிக கச்சா எண்ணெய் ஏற்றமதி செய்யும் நாடுகளில் ஈராக் இரண்டாவது இடத்தில் உள்ளது. வன்முறை காரணமாக கச்சா எண்ணெய் விநியோகமும் விலையும் பாதிக்கப்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இருப்பினும், தற்போதைய நிலவரப்படி தலைநகர் பாக்தாத்தில் மட்டும் வன்முறை வெடித்துள்ளது.
ஈராக்கின் முக்கிய கச்சா எண்ணெய் உற்பத்தி மையம் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள பஸ்ராவில் இருப்பதாகவும் அது பாக்தாத்திலிருந்து பல கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதால் கச்சா எண்ணெய் தொடர்பான பாதிப்பு ஏற்படும் ஆபத்து குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டது.

