பெய்ஜிங்: சீனாவின் ஸின்ஜியாங் மாநிலத்தில் நிலவும் உணவு, மருந்துப் பற்றாக்குறைக்கு அதிகாரிகள் மன்னிப்புக் கோரியுள்ளனர். கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக அப்பகுதி முடக்கப்பட்டுள்ளது.
ஸின்ஜியாங் வட்டாரத்தின் யிலி பகுதியில் நிலவும் பற்றாக்குறை, கடினமான நிபந்தனைகள் கடந்த சில நாள்களாக சீன சமூக ஊடகங்களில் வலம் வந்தன.
முடக்கநிலை உள்ள பகுதிகளில் மருத்துவ உதவி பெறமுடியாத நிலை உள்ளதாகவும் உணவு விநியோகத்தில் சிக்கல் உள்ளதையும் அப்பகுதியின் அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.
இதனை உடனடியாக சரி செய்ய உள்ளூர் அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வருவதாகவும் அம்மாநில ஆளுநர் சொன்னார்.
உய்கர் இன மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் ஸின்ஜியாங் மாநிலத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
யிலி பகுதியில் கிட்டத்தட்ட 500,000 மக்கள், சென்ற மாதம் 11ஆம் தேதியில் இருந்து முடக்கப்பட்டுள்ளனர்.

