அரசியாரின் மறைவு, ஹேரி-மேகன் தம்பதியை மீண்டும் அரச குடும்பத்துடன் நல்ல உறவை வளர்க்க தூண்டும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
லண்டன்: எலிசபெத் அரசியாருக்கு பிறகு மூன்றாம் சார்ல்ஸ் அரியணை ஏறியுள்ளதைத் தொடர்ந்து, அடுத்த அரசராகக்கூடிய வாரிசுகளின் பட்டியலும் மாறியுள்ளது.
மூன்றாம் சார்ல்ஸுக்குப் பிறகு, அரியணைக்கான முதல் இடத்தில் இளவரசர் வில்லியம் உள்ளார். மூன்றாம் சார்ல்ஸுக்கும் மறைந்த இளவரசி டயானாவிற்கும் பிறந்த மூத்த மகனான வில்லியம் பிரிட்டனின் புதிய இளவரசரராகியுள்ளார்.
இவர்களின் மூத்த மகனான ஒன்பது வயது ஜார்ஜ் அரியணைக்கான இரண்டாமிடத்தில் உள்ளாா்.
வில்லியம் தம்பதியின் இரண்டாவது வாரிசான ஏழு வயது மகள் சார்லட் மூன்றாம் இடத்திலும் இவர்களின் நான்கு வயது கடைசி மகன் லூயி நான்காம் இடத்திலும் உள்ளனர்.
இளவரசர் வில்லியம்மின் இளைய சகோதரர் ஹேரி ஐந்தாம் இடத்திலும் அவருக்கும் அவரது மனைவி மேகனுக்கும் பிறந்த மூத்த பிள்ளையான மூன்று வயது இளவரசர் ஆர்க்கி ஆறாவது இடத்திலும் ஆர்க்கியின் இளைய சகோதரியான ஒரு வயது லிலிபெட் ஏழாவது இடத்திலும் உள்ளனர்.
ஆனால், நிதி ரீதியில் சுதந்திரமாக செயல்பட விரும்பிய ஹேரி-மேகன் தம்பதி அரச குடும்பத்தில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் விலகினர்.
இவர்களுக்கு அடுத்தப்படியாக மறைந்த எலிசபெத் அரசியாரின் மூன்றாவது மகனான 62 வயது ஆண்ட்ரூ எட்டாவது இடத்தில் உள்ளார். பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான இவர், 2019ல் அரச குடும்பத்தில் இருந்து விலகினார்.
இதற்கிடையே, இரண்டாம் எலிசபெத் அரசியாரின் மறைவு, ஹேரியையும் அவரது மனைவி மேகனையும் அரச குடும்பத்துடன் மீண்டும் நல்ல உறவை ஏற்படுத்துவதற்கு தூண்டக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
மறைந்த அரசியாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் வைத்திருந்த மலர் வளையங்களைக் காண்பதற்கு இளவரசர் வில்லியமும் சகோதரர் ஹேரியும் தங்களது மனைவியுடன் ஒன்றாக சென்றது பலரின் கவனத்தை ஈர்த்தது.

