வாஷிங்டன்: உக்ரேன்-ரஷ்யா போர் காரணமாக உணவு விலையுயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு அவசர நிதி வழங்குவதற்கான வழிகளை அனைத்துலகப் பண நிதியம் தேடி வருகிறது. நேற்று நடைபெறவிருந்த நிர்வாகக் குழுச் சந்திப்பில் இதுகுறித்து கலந்தாலோசிக்கப்பட இருந்ததாக இந்த விவகாரம் பற்றி அறிந்த சிலர் கூறினர். வழக்கமான நிதித் திட்டத்தின்போது விதிக்கப்படும் நிபந்தனைகளை விதிக்காமல், உக்ரேனுக்கு உதவ நிதியத்தை இந்த நடவடிக்கை அனுமதிக்கும்.
அண்மைய மாதங்களாக நிதியத்தின் ஊழியர்கள் வகுத்துள்ள இந்தத் திட்டத்தை ஆதரிப்பதற்கான முறையான வாக்கெடுப்பு, அக்டோபரில் நடைபெறும் நிதியத்தின் வருடாந்திர சந்திப்புகளுக்கு முன்பு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"இந்தத் திட்டம் எளிமையானது, ஆனால் இது பல நாடுகளுக்குக் கைகொடுக்கும்," என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் கூறினார்.
உக்ரேன்-ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து உலகம் முழுவதும் உணவு விலைகள் ஏற்றம் கண்டு உள்ளன. வளர்ச்சி அடைந்த நாடுகளில் இவ்வாண்டு பணவீக்கம் 6.6 விழுக்காட்டையும் வளர்ந்துவரும் நாடுகளில் அது 9.5 விழுக்காட்டையும் எட்டும் என்று கடந்த ஜூலையில் நிதியம் முன்னுரைத்து இருந்தது.
உணவுப் பற்றாக்குறையால் அவதியுறும் பல ஆப்பிரிக்க நாடுகள், தங்களுக்கு கூடுதல் நிதி வழங்கக் கோரி வந்துள்ளன. எனினும், கூடுதல் நிதியை எத்தனை நாடுகள் நாடும் என்பது பற்றி தெளிவாகத் தெரியவில்லை.
உக்ரேனிய அதிகாரிகளுடன் தான் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாக பண நிதியம் கடந்த வாரம் கூறியது. எனினும், தங்களுக்கு முழுமையான நிதித் தொகுப்புத் திட்டம் தேவை என உக்ரேனிய அதிகாரிகள் கூறினர்.

