கோலாலம்பூர்: சட்ட திட்டங்களையும் நீதித்துறையின் சுதந்திரத்தையும் மதித்து நடக்கும்படி சிலாங்கூர் மன்னர் சுல்தான் ஷராஃபுதீன் இத்ரீஸ் ஷா, மலேசியர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.
மலேசிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா அகமது ஷாவுக்கு தமது ஆதரவையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பிட்ட சில தரப்பினருக்குப் பலன் தருவதற்காக மட்டும் அரச மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடாது என்று மாமன்னர் முன்னதாக கூறியிருந்தார்.
"நாட்டின் நலனுக்காகவும் வளத்துக்காகவும் நீதித்துறையைத் தற்காத்து அதன் சுதந்திரத்தை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க அனைத்து தரப்பினரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்," என்று சுல்தான் ஷராஃபுதீன் கையெழுத்திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
சிறைவாசம் சென்றுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு அரச மன்னிப்பு வழங்கக் கோரி அம்னோ தலைவர்களும் உறுப்பினர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளதைத் தொடர்ந்து மாமன்னர், சிலாங்கூர் மன்னரின் அறிக்கைகள் வெளிவந்துள்ளன.

