கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு மருத்துவ உதவி தேவைப்பட்டதால், நேற்று நடைபெறவிருந்த அவரது 1எம்டிபி ஊழல் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
நிலவரம் குறித்து சிறைச்சாலைத் துறை அதிகாரி தமக்குத் தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து, விசாரணை ஒத்திவைக்கப்பட்டதாக அரசாங்க தரப்பு மூத்த வழக்கறிஞர் கோபால் ஸ்ரீராம் கூறினார்.
"குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ரத்த அழுத்தத்துக்கான மருந்து மாற்றப்பட்டது. அது அவருக்குப் பக்கவிளைவுகளை ஏற்படுத்தியது," என்று ஸ்ரீராம் குறிப்பிட்டார்.
தம் தந்தையின் உடல்நிலை குறித்து தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் நேற்று பதிவிட்டார் நஜிப்பின் மகள் நூர்யானா நஜ்வா நஜிப்.
"மருந்து மாற்றப்பட்டதால் அப்பாவின் ரத்த அழுத்தம் ஆபத்தான அளவுக்கு உயர்ந்தது தெரியவந்துள்ளது," என்றார் அவர்.
வழக்கு விசாரணை இன்று தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

