புத்ரஜெயா: மலேசியாவில் சில குற்றங்களுக்கு மரண தண்டனைக்குப் பதிலாக வேறு தண்டனைகளை விதிக்க அந்நாட்டு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. மலேசியாவின் பிரதமர் அலுவலக அமைச்சர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜாஃபார் நேற்று இதைத் தெரிவித்தார்.
இம்மாதம் ஆறாம் தேதி, நேற்று முன்தினம் ஆகிய இரு நாள்களில் நடைபெற்ற சந்திப்புகளுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிக்கை ஒன்றில் டாக்டர் வான் ஜுனாய்டி குறிப்பிட்டார்.
அவர் தலைமை வகித்த பணிக்குழு அந்த சந்திப்புகளை நடத்தியது. 'கட்டாய மரண தண்டனைக்குப் பதிலாக மாற்று தண்டனைகள் செயல்பாட்டுப் பணிக்குழு' என்று அந்தப் பணிக்குழு அழைக்கப்படுகிறது.
கட்டாய மரண தன்டனை விதிக்கப்பட்டுவரும் 11 குற்றங்களுக்கு மாற்று தண்டனைகளை விதிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது. அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் '39பி' பிரிவுக்குக்கீழ் வரும் ஒரு குற்றம் அவற்றில் அடங்கும்.
அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் '39பி' பிரிவு, போதைப்பொருள் கடத்தலுக்குத் தொடர்புடையது.
1,337 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் டாக்டர் வான் ஜுனாய்டி தெரிவித்தார்.
மரண தண்டனை மாற்றம் குறித்த முடிவு அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்படும். அதற்கு அனுமதி வழங்கக் கோரி அமைச்சரவைச் சந்திப்பு நடத்தப்படும்.
இந்த சட்ட மசோதாவின் முதல் வாசிப்பு அடுத்த மாதம் நான்காம் தேதியன்றும் இரண்டாம் வாசிப்பு வரும் நவம்பர் மாதம் 22ஆம் தேதியன்றும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டாய மரண தண்டனையை நீக்கி மாற்று தண்டனைகளை விதிக்க மலேசிய அரசாங்கம் ஒப்புக்கொண்டதாக டாக்டர் வான் ஜுனாய்டி இவ்வாண்டு ஜூன் மாதம் கூறியிருந்தார். மாற்று தண்டனைகளை ஆராயும் அறிக்கை அம்மாதம் எட்டாம் தேதியன்று நடைபெற்ற அமைச்சரவைச் சந்திப்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு முடிவு எடுக்கப்பட்டது. கொலை, போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதம், ஆயுதங்களை வைத்திருப்பது உள்ளிட்ட குற்றங்களுக்கு மலேசியாவில் மரண தண்டனை விதிக்கப்படலாம்.

