ஜார்ஜ் டவுன்: செப்டம்பர் மாதம் வந்துவிட்டபோதும் இவ்வாண்டே பொதுத் தேர்தலை நடத்த இன்னமும் கால அவகாசம் இருப்பதாக மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் கூறியுள்ளார். ஆனால், அது அம்னோ கட்சியின் ஆக உயரிய பதவியில் இருக்கும் ஐந்து தலைவர்களைப் பொறுத்தே இருக்கும் என்று திரு இஸ்மாயில் குறிப்பிட்டார்.
"ஒவ்வொரு முடிவையும் அம்னோவின் ஆக உயரிய ஐந்து தலைவர்கள் எடுப்பர்," என்று அவர் சொன்னார். பிரதமர் இஸ்மாயில், கட்சியின் தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடி, இணைத் தலைவர் முகம்மது ஹசான், துணைத் தலைவர்களான முகம்மது காலெட் நோர்டின், மாஹ்ட்ஸீர் காலிட் ஆகியோர் அந்த ஐவர். திரு இஸ்மாயிலும் அம்னோவின் துணைத் தலைவர்களில் ஒருவர்.
அடுத்த மாதம் ஏழாம் தேதியன்று 2023 நிதியாண்டுக்கான மலேசியாவின் வரவுசெலவுத் திட்டம் அறிவிக்கப்படவுள்ளது. பொதுத் தேர்தல் அதற்கு முன்பு நடத்தப்படுமா அல்லது பின்னர் நடத்தப்படுமா என்று திரு இஸ்மாயிலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "சந்திப்பு அதற்கு முன்னரே நடத்தப்படலாம்," என்று பதிலளித்தார்.
ஆண்டிறுதியில் பொழியும் பருவமழையால் மலேசியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகள் பொதுவாக வெள்ளத்தால் பாதிக்கப்படும். அதனால் இவ்வாண்டு இறுதியில் பொதுத் தேர்தல் நடத்தப்படாது என்று பொதுவாகக் கருதப்படுகிறது.
வரும் டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதியிலிருந்து 31ஆம் தேதிவரை பள்ளி விடுமுறை நாள்களாக இருக்கும். வரவுசெலவுத் திட்டத்தை யார் அறிவிப்பார் என்பது குறித்து திரு இஸ்மாயில் தகவல் ஏதும் வெளியிடவில்லை.
"அக்டோபர் ஏழாம் தேதிவரை காத்திருங்கள்," என்றே அவர் சொன்னார்.
'பொதுத் தேர்தல் தேதி குறித்து அம்னோவின் ஆக உயரிய தலைவர்கள் கலந்து பேசுவர்'

