பெஷாவர்: பாகிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் முன்னாள் அரசாங்க சார்பு துணை ராணுவத் தலைவர் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இயங்கும் தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள கபால் நகரில் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. 2007, 2009 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதியின் பெரும்பாலான இடங்கள் தாலிபான் ஆட்சியில் இருந்தன.
பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தங்களின் கிராமங்களைத் தற்காத்துக்கொள்ளுமாறு பழங்குடியினக் கிளர்ச்சியாளர் படைகளை இஸ்லாமாபாத் ஊக்குவித்து வந்தது. அந்தப் பழங்குடியினப் படைகள் அமைதிக் குழுக்கள் என்று அழைக்கப்பட்டனர்.
அவற்றின் போராட்டம் அடக்கப்பட்டது. அமைதிக் குழுக்களில் பெரும்பாலானவை கலைக்கப்பட்டன.
அந்த அமைதிக் குழு ஒன்றின் முன்னாள் தலைவரான இட்ரீஸ் கான் நேற்று முன்தினம் நிகழ்ந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஸ்வாட் வட்டாரக் காவல்துறை அதிகாரி ஸாஹிட் நவாஸ் மார்வாட் கூறினார்.
சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு இட்ரீஸ் கானின் லாரியைத் தாக்கியதால் அவர் மாண்டார்.
இரண்டு காவல்துறை அதிகாரிகள், இரு தனியார் பாதுகாப்பு அதிகாரிகள், சாதாரண ஊழியர்கள் மூவர் ஆகியோரும் மாண்டதை மற்றொரு காவல்துறை அதிகாரி உறுதிப்படுத்தினார்.

