ஜகார்த்தா: புகைமூட்டமாக இருக்கக்கூடிய இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவின் சாலைகளில் பயணிகளை ஏற்றிச் செல்வது பலனளிக்குமா என்று கருதுகிறார் ஓட்டுநர் முகம்மது ரிட்வான்.
இந்தோனீசியாவில் அண்மையில் எரிசக்தி விலைகள் 30 விழுக்காடு அதிகரித்தன. அதைத் தொடர்ந்து ஆகப் பிரபலமான வாடகை வாகனச் செயலிகளுக்கு வேலை செய்யும் நூற்றுக்கணக்கான ஓட்டுநர்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
"வாகன எரிசக்திக்குப் போதுமான தொகை இருப்பதை உறுதிசெய்ய சில நாள்களில் ஒரு வேளைகூட சரியாக உணவு உட்கொள்ளாமல் இருப்பேன். எரிசக்தி இல்லாவிட்டால் என்னால் எப்படி வேலை செய்யமுடியும்?" என்றார் கோஜெக் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் திரு ரிட்வான். கோஜெக், சிங்கப்பூரின் கிராப் ஆகிய இரண்டும் ஆசியாவின் ஆக மதிப்புமிக்க புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனங்கள்.
விதிமுறைகள் அதிகம் இல்லாத சூழலில் இத்தகைய ஓட்டுநர்கள் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. ஓட்டுநர்களின் ஊதியத்தில் பெரும்பங்கைத் தாங்கள் பெற்றுக்கொண்டு நிறுவனங்கள் அவர்களின் நிலையைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
உக்ரேன் போரால் உலகளவில் மோசமடையும் பணவீக்கம், அதிகரிக்கும் எரிசக்தி விலைகள் ஆகியவற்றைச் சமாளிக்க இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ எரிசக்தி சலுகைகளைப் பெரிய அளவில் குறைத்தார். அதற்குப் பிறகு அந்நாட்டின் ஆக மலிவான எரிசக்தியான 'பெட்ராலைட்'டின் விலைகூட லிட்டருக்கு 7,650 ருப்பியாவிலிருந்து (0.72 வெள்ளி) 10,000 ருப்பியாவாகக் கூடியது.
அதிகரித்துள்ள செலவைச் சமாளிக்க கோஜெக், கிராப் இரண்டும் சிறிதளவே பயணக் கட்டணங்களை உயர்த்தியாக சில ஓட்டுநர்கள் தெரிவித்தனர். அரசாங்க விதிமுறைகளுக்கு ஏற்றவாறே தங்களின் பயணக் கட்டணங்களை மாற்றியதாக அவ்விரு நிறுவனங்களும் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறின. கட்டணம் எவ்வளவு உயர்த்தப்பட்டது என்பது குறித்து கோஜெக், கிராப் இரண்டும் தகவல் வெளியிடவில்லை. எனினும், கட்டண உயர்வு ஓட்டுநர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யவில்லை என்று ஊழியரணித் தலைவர்கள் கூறினர்.
தற்போதைக்கு நூற்றுக்கணக்கான ஓட்டுநர்கள் மட்டுமே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தோனீசியாவில் எரிசக்தி விலை உயர்வால் எழுந்துள்ள சவால்கள்

