கோலாலம்பூர்: மலேசியாவின் அடுத்த பொதுத் தேர்தல் நெருங்கிவிட்டதாக அந்நாட்டின் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.
அம்னோ தலைவர் அகமது ஸாஹிட் அகமது ஹமிடியுடன் கலந்துரையாடி தேதி நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றார் அவர்.
"என்னை நம்புங்கள். இன்னும் சில நாள்களுக்குப் பொறுமையுடன் இருங்கள். தேர்தலுக்கு நீங்கள் விடுக்கும் அழைப்பு எனக்குத் தெளிவாகக் கேட்கிறது," என்று அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணியின் இளையர் அணிக்கான தேர்தல் தயார்நிலை இயக்கத்தைத் தொடங்கி வைத்துக் கூறினார் திரு இஸ்மாயில்.
அம்னோ கட்சியின் ஐந்து மூத்த தலைவர்கள் ஒன்றுகூடி நாட்டின் 15வது தேர்தலுக்கான தேதியை முடிவு செய்வர் என்று அவர் தெரிவித்தார்.
அம்னோ தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடி, துணைத் தலைவர் முகம்மது ஹசன், உதவித் தலைவர்களான முகம்மது காலிட் நூர்டின், மட்சிர் காலிட், பிரதமர் இஸ்மாயில் ஆகியோர் அந்த ஐந்து மூத்த தலைவர்களாவர்.
"நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும். அப்போது தேசிய முன்னணி வாகை சூடுவதுதான் முக்கியம்," என்று திரு இஸ்மாயில் கூறினார்.
மேடையில் நின்றுகொண்டு திரு இஸ்மாயில் பேசிக்கொண்டிருந்தபோது நாடாளுமனறத்தைக் கலைக்கக் கோரி தேசிய முன்னணியின் இளையர் அணியினர் குரல் எழுப்பினர். மலேசிய நாடாளுமன்றத்தை அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் கலைக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து, 60 நாள்களுக்குள் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும்.
தேர்தலை உடனடியாக நடத்தும்படி திரு ஸாஹிட் உட்பட அக்கட்சியின் உறுப்பினர்கள் அண்மைக் காலமாக திரு இஸ்மாயிலுக்கு நெருக்குதல் அளித்து வருகின்றனர்.
பிளவுப்பட்டு கிடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்க முடியாத நிலை தற்போது நிலவுவதால் அதைத் தனக்குச் சாதகமாகக் கொண்டு அம்னோ தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே அவர்களது விருப்பம்.
அண்மையில், மலேசியாவின் முன்னாள் பிரதமரும் அம்னோ கட்சியினரிடையே பிரபலமாக இருந்த தலைவருமான நஜிப் ரசாக்கிற்கு ஊழல் குற்றம் தொடர்பாக 12 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பிறகு தேர்தலை உடனடியாக நடத்தியே ஆக வேண்டும் என்று அம்னோ கட்சியினர் அடிபோடுகின்றனர்.
நஜிப்பிடம் நீதிமன்றம் நியாயமாக நடந்துகொள்ளவில்லை என்று அவர்கள் அதிருப்தி தெரிவித்
தனர்.

