கோத்தா பாரு: மலேசியாவில் கிளந்தான் மாநிலத்தில் உள்ள தும்பாட் நகரிலிருந்து கடந்த வாரம் கடத்தப்பட்ட மலேசியப் பெண்ணைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அழகுப் பொருள்கள் விற்பனை முகவரான அந்தப் பெண்ணை அவரது வீட்டிலிருந்து கடத்தல்காரர்கள் கடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்பெண் தாய்லாந்துக்குக் கடத்தப்பட்டிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதையடுத்து, அப்பெண்ணின் படத்தைக் கொண்ட துண்டு பிரசுரங்களை தாய்லாந்து காவல்துறை அந்நாட்டின் நராதிவாட் மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது.
சந்தேக நபரின் படங்களும் காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அந்த 36 வயது பெண்ணைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் கிளந்தான் காவல்துறையினருக்கு தாய்லாந்துக் காவல்துறையினர் உதவி வருகின்றனர்.
கடத்தப்பட்டுள்ள பெண்ணைத் தேடி நராதிவாட் மாநிலத்தில் உள்ள ஹோட்டல்கள், சரக்குக் கிடங்குகள், குடியிருப்புகள் எனப் பல இடங்களில் தாய்லாந்துக் காவல்துறையினர் அதிரடிச் சோதனைகளை நடத்தினர்.
இருப்பினும், கடத்தப்பட்ட பெண்ணையும் சந்தேக நபரையும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று நராதிவாட் காவல்துறையின் தலைவர் ஜெனரல் வான் சிமான் தெரிவித்தார்.

