பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் அடுத்த பொதுத் தேர்தல் இவ்வாண்டுக்குள் நடத்தப்படக்கூடும் என்று அம்னோ தெரிவித்துள்ளது.
கூடிய விரைவில் நாடாளு
மன்றம் கலைக்கப்படக்கூடும் என மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருப்பது இதை உணர்த்துவதாக அம்னோவின் தலைமைச் செயலாளர் அகமது மஸ்லான் கூறினார்.
"மலேசியாவின் 15வது பொதுத் தேர்தல் வரும் அக்டோபர் மாதத்துக்கும் டிசம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் என்ற நம்பிக்கை அம்னோவுக்கு உள்ளது.
"ஆனால் வெள்ளம் ஏற்படும் முன்பே தேர்தலை நடத்திவிட வேண்டும்.
"டிசம்பர் மாதத்தில் வெள்ளம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டால் அந்த மாதத்தில் தேர்தல் நடத்துவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக நவம்பர் மாதத்தில் தேர்தலை நடத்தலாம். தேர்தல் நவம்பர் மாதத்தில் நடத்தப்பட்டால் நாடாளுமன்றத்தை அக்டோபர் மாதத்தில் கலைக்க வேண்டும்," என்று திரு அகமது மஸ்லான் கூறியதாக மலேசியாவின் மலாய்மொழி நாளிதழான சினார் ஹரியான் தெரிவித்தது.
இதற்கிடையே, பருவமழைக் காலத்தில் தேர்தல் நடத்துவதில் எவ்விதத் தவறும் இல்லை என்று அம்னோ கட்சியின் தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடி கருத்து தெரிவித்துள்ளார்.
"1999ஆம் ஆண்டு நவம்பர் மாதம், பருவமழைக் காலத்தில் அப்போதைய பிரதமரான டாக்டர் மகாதீர் முகம்மது தேர்தலை
நடத்தினார்.
"அப்போது அது பெரிய விவகாரமாக மாறவில்லை. இதைப் பலர் மறந்துவிட்டனர்," என்று திரு ஸாஹிட் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று பதிவிட்டார்.
மலேசிய வானிலை மையத்தைப் பொறுத்தவரை மலேசியாவில்
பருவமழைக் காலம் பொதுவாக செப்டம்பர் மாதம் தொடங்கி
ஆண்டிறுதியில் நிறைவடையும்.
இதைக் கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகள் அக்கறை தெரிவித்துள்ளன.
மலேசியாவில் ஆண்டிறுதியில் பெய்யும் கனமழையால் நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் வெள்ளம் கரைபுரண்டோடுவது வழக்கம் என்பதை அவை சுட்டின. குறிப்பாக, கிழக்கு மாநிலங்களான கிளந்தான், திரங்கானு, பாஹாங்கில் நிலைமை மோசமாக இருக்கக்
கூடும் என்று எதிர்க்கட்சியினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு ஒருநிலை ஏற்பட்டால் வெள்ளத்தில் மாட்டிக்கொண்டு பலரால் வாக்களிக்க முடியாமல் போகக்கூடும் என்று அவர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.
ஆனால் தோல்விக்குப் பயந்து எதிர்க்கட்சிகள் இவ்வாறு பேசுவதாக திரு ஸாஹிட் தெரிவித்தார்.
"கடந்த பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, மலேசியர்
களுக்குத் தந்த வாக்குறுதிகளை அது நிறைவேற்றவில்லை.
"எனவே, தேர்தலை இப்போது நடத்தினால் தோல்வி அடைந்துவிடுவோம் என்று அவர்கள் அஞ்சு கிறார்கள்," என்று திரு ஸாஹிட் தெரிவித்தார்.
தேசிய முன்னணிக்கு எதிராக மலேசியர்களைத் திசைதிருப்ப எதிர்க்கட்சிகளுக்குக் கூடுதல் நேரம் தேவைப்படுவதாகவும்
அதனால்தான் தேர்தலை தற்போது நடத்த வேண்டாம் என அவை கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் அத்தகைய வாய்ப்பை எதிர்க்கட்சிகளுக்கு அம்னோ வழங்காது என்று திரு ஸாஹிட் கூறினார்.

