மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிர் இழந்துள்ள பரிதாபம் நேர்ந்துள்ளது.
இம்மாதம் 18ஆம் தேதி தெற்கு நோக்கிச் செல்லும் வழியில் சிம்பாங் ரெங்காம் பகுதியில் உள்ள மச்சாப் சுங்கச்சாவடி அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து காலை 7 மணி அளவில் ஏற்பட்டபோது அதிக மழை பெய்துகொண்டிருந்தது.
நான்கு வாகனங்கள்- ஒரு பெரோடா மைவி, டொயோட்டா ஹையேஸ், வோல்வோ டிரெய்லர், டொயோட்டா கொரோலா- விபத்துக்குள்ளாகின என்று மலேசியாவின் பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
டொயோட்டா கொரோலா காரில் திரு கோ டியோங் செங், 50, மனைவி ஹொங் மே யின் ஆகியோருடன் 20களில் இருக்கும் அவர்களது மகள் கோ பெய் சியூ, மகன் கோ சுவான் டிங்கும் பயணம் செய்துகொண்டிருந்தனர்.
திரு கோவும் அவரது இரு பிள்ளைகளும் சம்பவ இடத்திலேயே மாண்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரது மனைவி திருவாட்டி ஹோங் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்ட குளுவாங் மருத்துவமனையில் மாண்டார்.
விபத்தில் சிக்கிய இன்னொருவருக்குக் காயம் ஏற்பட்டது, மேலும் இருவர் உயிர் தப்பினர்.
மலாக்காவைச் சேர்ந்த திரு கோவின் குடும்பம் ஜோகூர் பாருவிற்குச் சென்றுகொண்டிருந்தனர்.

