நியூயார்க்: அமைதி உடன்படிக்கையின் ஒரு பகுதியாக உக்ரேனிட
மிருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளை ரஷ்யா திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று நியூயார்க்கில் பிபிஎஸ் தொலைக்காட்சி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்த துருக்கி அதிபர் ரிசெப் தையிப் எர்டோவான் கூறினார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் கடந்த வாரம் உஸ்பெக்கிஸ்தானில் தாம் தீவிரமாகக் கலந்துரையாடியதாக திரு எர்டோவான் தெரிவித்தார்.
"போரைக் கூடிய விரைவில் நிறுத்த புட்டின் தயாராக இருப்பதாகத் தோன்றுகிறது. இது என்னுடைய கருத்து. தற்போதைய நிகழ்வுகள் பெரும் சிக்கலை ஏற்
படுத்தியுள்ளன," என்றார் அதிபர் எர்டோவான். சண்டை நிறுத்தம் ஏற்பட வேண்டுமாயின் கைப்பற்றப்பட்ட பகுதிகளை ரஷ்யா திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். போர்க் கைதிகள் பரிமாற்றத்துக்கு இருதரப்பும் இணங்கியிருப்பதாக திரு எர்டோவான். இதுகுறித்து கூடுதல் விவரங்களை அவர் வெளியிடவில்லை. உக்ரேன் மீது படையெடுத்ததற்காக புட்டினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமா என்று திரு எர்டோவானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த திரு எர்டோவான், இந்த விவகாரத்தில் துருக்கி நடுநிலையுடன் நடந்துகொள்ளும் என்று தெரிவித்தார். சம்பந்தப்பட்ட இருநாடுகளுக்கும் திருப்தி அளிக்கும் வகையில் தீர்வு காண வேண்டும் என்றார் அவர்.
இந்நிலையில் ஐநா பொதுக் கூட்டத்தில் பேசிய உக்ரேனிய வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா, இழந்த பகுதிகளை மீட்க உக்ரேனியப் படைகள் தொடுக்கும் பதிலடித் தாக்குதல்கள் தொடர, நட்பு நாடுகள் ஆயுத உதவி வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதற்கிடையே, ரஷ்யா தனது ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பதில் சிரமத்தை எதிர்நோக்குவதாக பெயர் குறிப்பிடாத அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாக ராய்ட்டர்ஸ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உக்ரேனுக்கு எதிரான போரில் அண்மை நாள்களில் ரஷ்யாவுக்குப் பல பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன.
இதன் விளைவாக ரஷ்யாவுக்காகப் போரில் களமிறங்க அந்நாட்டினர் பலர் மறுத்துவிட்டதாக அந்த அதிகாரி கூறினார். உக்ரேனுக்கு எதிரான போரில் சண்டையிட ரஷ்யக் கைதிகள், தஜிகிஸ்தானியர்கள், பெலரூஸ் நாட்டினர், ஆர்மினியர்கள் ஆகியோருக்கு ரஷ்யாவுடன் நெருங்கிய தொடர்புடைய தனியார் ராணுவமான
வேக்னர் குழுமத்தின் தலைவர் அழைப்பு விடுக்கும் காணொளி இணையத்தில் வலம் வருவதை அந்த அமெரிகக் அதிகாரி சுட்டினார். ரஷ்யாவுக்காகப் போரில் சண்டையிட 1,500க்கும் மேற்பட்ட கைதிகளை ஆள் சேர்க்கும் பணியில் வேக்னர் குழுமம் முயற்சி செய்வதாக அமெரிக்கா நம்புகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ரஷ்யாவுக்காகப் போர் புரிய அந்தக் கைதிகளில் பலர் விரும்பவில்லை என்றும் அவர்கள் மறுத்துவிட்டதாகவும் அறியப்படுகிறது. உக்ரேனுக்கு எதிராக ஆறு மாதங்களுக்குப் போரிட்டால், ரஷ்யா திரும்பியதும் அவர்கள் சிறை
யிலிருந்து விடுவிக்கப்படுவர் என்று சிறைக் கைதிகளுக்கு வேக்னர் குழுமம் வாக்குறுதி அளிக்கும் காணொளி கடந்த வாரம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க, உக்ரேன் தலைநகர் கியவ்வில் வழக்கநிலை திரும்பும் அறிகுறிகள் தென்படுகின்றன. கியவ்வில் மெக்
டோனல்ஸ் உணவகங்கள் நேற்று மீண்டும் செயல்படத் தொடங்கின. ஆனால் தற்போதுக்கு உணவகங்
களுக்குச் சென்று சாப்பிட முடியாது. உணவு விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மெக்டோனல்ஸ் உணவகங்களுக்கு வெளியே உணவு விநியோக ஊழியர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். அக்டோபர் மாதத்தில் மூன்று மெக்டோனல்ஸ் உணவகங்கள் முழுமையாகத் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

