இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் ஆர்சனல் முதலிடத்தை வகித்
தாலும் நடப்பு வெற்றியாளர் குழுவான மான்செஸ்டர் சிட்டிக்கும் டொட்டன்ஹம் ஹாட்ஸ்பருக்கும் இடையேதான் லீக் கிண்ணத்துக்கான போட்டி சூடுபிடிக்கும் என்ற உணர்வு எழுந்துள்ளது. சிட்டி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது, ஸ்பர்ஸ் மூன்றாம் இடத்தில்.
கடந்த சில வாரங்களாக சிட்டி நட்சத்திரம் எர்லிங் ஹாலண்டைப் பற்றி அதிகம் பேசப்பட்டு வந்துள்ளது. தென்கொரியாவைச் சேர்ந்த ஸ்பர்ஸின் தாக்குதல் ஆட்டக்காரர் சொன் ஹியோங் மின் இந்தப் பருவம் கோல் போடவில்லை என்ற பெரிய குறை இருந்தது.
சுருக்கமாகச் சொன்னால் சொன் மறக்கப்பட்டிருந்தார்.
ஆனால் விமர்சகர்களுக்கு அதிரடியாகப் பதிலளிக்கும் வகையில் லெஸ்டர் சிட்டிக்கு எதிராக மூன்று கோல்களைப் போட்டு அசத்தினார் சொன். லெஸ்டரை 6-2 எனும் கோல் கணக்கில் வென்றது ஸ்பர்ஸ்.
நிர்வாகி என்டோனியோ கொன்டேயின் தலைமையில் ஸ்பர்ஸ் லீக் கிண்ணத்திற்குப் போட்டி தரும் என்ற உணர்வு எழ ஆரம்பித்துள்ளது. இந்த லீக் பருவம் தொடங்கி ஏேழ ஆட்டங்கள்தான் சென்றுள்ளன.
எனினும், கொன்டேயின் தன்னம்பிக்கை, வெல்லவேண்டும் என்ற மனவுறுதி இரண்டும் அவரின் விளையாட்டாளர்களிடமும் இருந்தால் ஸ்பர்ஸ் லீக் கிண்ணத்தை வெல்வது சாத்தியம்.
கடைசியாக 61 ஆண்டுகளுக்கு முன்பு லீக் கிண்ணத்தை வென்றது ஸ்பர்ஸ்.
எனினும், தொடர்ந்து மூன்றாவது முறையாக லீக் கிண்ணத்தை வெல்லும் இலக்குடன் அபாரமாக ஆடி வந்துள்ளது சிட்டி. யார் சரியாக ஆடாவிட்டாலும் ஹாலண்டின் கோல் மழை தொடர்ந்து பொழிந்தால் சிட்டியைத் தடுப்பது சிரமம்தான்.
ஹாலண்ட் கோல் போடுவதைத் தடுப்பதே சிட்டியை வெல்லவிடாமல் செய்வதற்கான ரகசியம். ஆனால் அதைச் செய்வது சாதாரணமன்று.
சென்ற வாரம் லீக்கில் சிட்டியும் ஸபர்சும் மோதவிருந்தன. எலிசபெத் அரசியார் இறந்ததால் பிரிட்டனில் காற்பந்து ஆட்டங்கள்
ஒத்திவைக்கப்பட்டன.
தற்போதைய நிலவரப்படி அந்த ஆட்டத்தில் ஸ்பர்ஸ் வென்றிருந்தாலும் ஆச்சரியம் இல்லை. பெரிய அணிகளையும் நட்சத்திரங்களையும் எளிதாகத் தடுக்கத் தனது குழுவைத் தயார்செய்யும் ஆற்றல் கொன்டேக்கு உண்டு.
அதற்காக வெற்றி ஸ்பர்சுக்கே என்றும் சொல்லிவிட முடியாது. அந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பானதாக அமைந்திருக்கலாம்.
கடந்த வாரம் வுல்வர்ஹேம்ப்டன் வாண்டரர்ஸ் குழுவை 3-0 எனும் கோல் கணக்கில் வென்றது சிட்டி.
ஸ்பர்ஸ், சிட்டி இரண்டையும்விட ஒரு புள்ளி அதிகமாகப் பெற்று பட்டியலில் முதலிடம் வகிக்கும் ஆர்சனல் கடைசிவரை லீக் கிண்ணத்திற்குப் போட்டி தருமா என்பது தெரியவில்லை.
அபாரமாக விளையாடிவந்த ஆர்சனல் இரண்டு வாரங்களுக்கு முன்பு லீக்கில் மான்செஸ்டர் யுனைடெட்டிடம் தோல்வியுற்றது. அதனால் பெரிய குழுக்களுக்கு எதிராக ஆர்சனல் சிறப்பாக விளையாடுமா என்ற கேள்வி நிலவுகிறது.
எனினும், தற்போதைக்கு
அந்தத் தோல்வியிலிருந்து நன்கு மீண்டு வந்துள்ளது, பிரென்ட்ஃபர்ட்டை 3-0 எனும் கோல் கணக்கில் வென்ற ஆர்சனல். பருவம் தொடங்கியபோது யுனைடெட்டையே 4-0 எனும் கோல் கணக்கில் திக்குமுக்காடச் செய்த குழு பிரென்ட்ஃபர்ட்.
இதற்கு முன்பு வந்த பருவங்களில் விளையாடியதை வைத்துப் பார்க்கும்போது இந்தப் பருவத்தில் ஆர்சனல் தடுமாறும் என்று சொல்லலாம்.
அதே வேளையில் நிர்வாகி மிக்கெல் அர்டெட்டாவின் தலைமையில் ஆர்சனல் படிப்படியாக முன்னேறி வந்துள்ளதால் இம்முறை அது தொடர்ந்து சிறப்பாக ஆடவும் வாய்ப்புள்ளது.
பிரிட்டனின் எலிசபெத் அரசியாரின் இறுதிச் சடங்கிற்குப் பல காவல்துறை, பாதுகாப்பு அதி
காரிகள் நியமிக்கப்பட்டதால் கடந்த வாரம் சில பிரிமியர் லீக் ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன. அதனால் லிவர்பூல், செல்சி, மான்செஸ்டர் யுனைடெட் உள்ளிட்ட குழுக்கள் விளையாடவில்லை. தனது நிர்வாகியை செல்சியிடம் இழந்த பிரைட்டனும் ஆடவில்லை.

